Skip to main content

மே தினத்தை வென்றெடுத்த கதை

அறிமுகம்
இன்றைய காலப்பரப்பில் பல சமயங்களில் எதற்காக கொண்டாடப்படுகின்றது என்பது தெரியாமல் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன. எத்தனையோ தினங்கள் கொண்டாடப்பட்டாலும் உழைக்கும் மக்களின் தினமாக அமைவது என்னமோ மே தினம் மட்டும்தான். இந்த மே தினத்தின் தோற்றத்தையும் அதனோடு இணைந்த குருதி தோய்ந்த பக்கங்களையும் மீள்நினைவூட்டல் செய்வதற்காய் பின்னோக்கிய பார்வை.

ஆரம்பகாலம்
19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், உதிக்கும் சூரியன் மறையும் வரை, இதற்கு மேலாகவும் வேலை செய்வதே தொழிலாளரின் கடமையாக இருந்தது. இது பல ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்ததால், இதன் கொடுமை குறித்த தெளிவை எவரும் கண்டுகொள்ளவில்லை. 1806இல் அமெரிக்கத் தொழிற்சங்கத் தலைவர்கள், வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தை ஒழுங்கு செய்ய முயற்சித்தமைக்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். இவ்வழக்கே தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்கள் வேலை செய்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியது. இதன் விளைவாகவே, “தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், அவர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும்” என்றும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

1827இல் முதலாவது தொழிற்சங்கம் அமெரிக்காவில் தோற்றம் பெற்றது. இதைத் தொடர்ந்து பல தொழிற்சங்கங்கள் தோன்றின. இவை பத்து மணித்தியாலய வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி நின்றன. இந்த அமெரிக்க தொழிற்சங்கங்கள் குறித்து கார்ல் மாக்ஸ் சொன்ன கருத்து முக்கியமானது.
“ஐக்கிய அமெரிக்காவில் எந்தவகையான சுதந்திரமான தொழிற்சங்க அமைப்புக்களும், ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக அடிமைத்தனம் இருக்கும் வரை நோய்வாய்ப்பட்டே இருக்கும். வெள்ளைத் தோல் உடைய தொழிலாளியால் கறுப்புத்தோல் என முத்திரை குத்தப்பட்ட தொழிலாளியை விடுவிக்க முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் மறைவின் பின்பே எந்தவொரு பயன்தரக் கூடிய மாற்றத்தையும் எதிர்பார்க்கலாம்." (1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூலதனம் பகுதி 1, உழைப்பாளர் அத்தியாயத்தில் இருந்து)

எட்டு மணிநேர வேலை
ஒரு நாளைக்கு எட்டு மணித்தியால வேலை என்ற எண்ணக்கரு அவுஸ்திரேலியாவிலேயே தோற்றம் பெற்றது. 1856இல் அங்குள்ள தொழிலாளர்கள் குறித்த ஒரு நாளில் முற்றாக வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு 8 மணித்தியாலம் வேலைக்காக குரல் கொடுக்க முடிவெடுத்தனர். அவர்கள் இதை நிகழ்த்திய தினம் ஏப்ரல் 21ஆம் திகதி ஆகும். முதலில் அவர்கள் இதனை 1856ஆம் ஆண்டு மட்டுமே செய்வதாக இருந்தனர். ஆனால் முதலாவது போராட்டத்தின் வலுவும், வெற்றியும் அதிக தொழிலாளர்களின் பங்கேற்பும் ஒவ்வொரு வருடமும் இதைச் செய்வதற்குத் தூண்டியது.

இவர்களை
பின்பற்றி 1886இல் அமெரிக்க தொழிலாளர்கள் மே முதலாம் திகதியை தாங்கள் சர்வதேச வேலைநிறுத்த தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தினர். 1886இல் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை விட்டு 8 மணிநேர வேலைக்காக போராடினர்.

சிக்காகோ வேலைநிறுத்தமும், ஹெ-மாக்கற் சம்பவமும்
1886இல் மே தினத்தன்று சிக்காக்கோவில் பல இலட்சம் தொழிலாளர் குவிந்தனர். அவர்கள் 8 மணிநேர வேலையை முன்நிறுத்தி ஒரு பேரணியை நடத்தினர். அரசும் முதலாளிகளும் இணைந்து பேரணியில் கலந்து கொண்டோரை கைது செய்தனர். அத்துடன் தலைவர்களை அழிப்பதோடு இத்தொழிலாளர்கள் அமைப்பையே முற்றுமுழுதாக அழிப்பது என உறுதி பூண்டனர். இதன் பின்னர் மே 3ஆம், 4ஆம் திகதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளே புகழ்பெற்ற ஹெ-மாக்கற் சம்பவமாக நினைவு கூரப்படுகின்றது. இது மே முதலாம் திகதி விளைவாக உருவானது. மே 3ஆம் திகதி அமைதியான எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதை பொலிசார் வன்முறையான தாக்குதல் மூலம் ஒடுக்க முயன்றனர். இதன் விளைவால் ஆறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
மே 4ஆம் திகதி ஹெ-மாக்கற் சதுக்கத்தில் கூடியிருந்த தொழிலாளர்களை நோக்கி பொலிஸார் தாக்குதல் நடத்தினர். மக்களுக்குள் குண்டு ஒன்று வீசப்பட்டது. இதனால் ஏற்பட்ட கைகலப்பில் 7 பொலிஸாரும், 4 தொழிலாளர்களும் இறந்தனர். ஹெ-மாக்கற் சதுக்கம் இரத்த வெள்ளத்தில் மிதந்தது.

சர்வதேச மே தினம் குறிக்கப்பட்டது
1889இல் யூலை 14ஆம் திகதி பெஸ்ரில் கோட்டையின் வீழ்ச்சியின் நூற்றாண்டு நினைவாக உலக நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தினர் ஒன்று கூடி மே முதலாம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தினர். 1890 மே முதலாம் திகதி 4ஆவது ஜேர்மன் மொழிப்பதிப்பிற்கான கம்யூனிச பிரகடனத்தின் முன்னுரையில் பிரட்ரிக் ஏங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"நான் இவ்வரிகளை எழுதுகின்ற வேளையில் உலக தொழிலாளர்கள் ஒன்றிணைந்த ஒரே குடையின் கீழ் ஒரே குறிக்கோளுக்காக போராடுகின்றார்கள். நாளுக்கு எட்டு மணிநேர வேலையை சட்டபூர்வமாக்குவதன் மூலம் முதலாளிகளுக்கும், நிலவுடைமையாளர்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபட்டுள்ளோம். உலகம் இன்று எங்கள் கையில். இது உண்மை இன்றி வேறில்லை என புரியவைக்க முடியும். இந்த அருமையான நிகழ்வுகளை என்னுடன் இருந்து தன் கண்களால் பார்க்க மார்க்ஸ் இல்லை என்பதே என் வருத்தம்”.

மேதினத்தை சிதைக்கும் முயற்சிகள்
சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் மேதினத்தை பலவழிகளில் சிதைக்க முயுன்றனர். அவர்கள் மேதினமானது மே முதலாம் திகதிக்கு கிட்டிய ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட வேண்டும் என்றனர். உண்மையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை இல்லை என்பதால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய தேவை இல்லை. இதன் மூலம் முதலாளிகள் நலன் பாதுகாக்கப்படும். இவர்கள் மே தினத்தை களியாட்ட ஒய்வுக்கான நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டும் என வற்புறுத்தினர். அத்துடன் கூட்டங்கள் சர்வதேச நட்புறவையும் நலன் விசாரிப்பையும் மையப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

போர்க்காலத்தில் மேதினம்
1915இல் போலியான சோசலிச பற்றாளர்களின் முகத்திரைகள் கிழியத் தொடங்கின. ஜேர்மனியில் தொழிலாளர்கள் மே முதலாம் திகதியும் தவறாமல் வேலை செய்யும் படி சோசலிசவாதிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதேவேளை, பிரான்சிய சோசலிசவாதிகள் அரசாங்க அதிகாரிகளிடம் மேதினத்தன்று தொழிலாளர்கள் வேலைசெய்வார்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம் என உறுதி அளித்தனர். இதேபோன்ற செயற்பாடுகளை பல உலக நாடுகளில் காணக் கூடியதாய் இருந்தது. ஆனால் இக்கட்டான போர்ச்சூழலிலும் ரஷ்ய போல்ஸ்விக்குகள் வழமை போல மேதினத்தை கொண்டாடினர். இதேவேளை, லெனின் லுக்சம்பேர்க், லேபகனாற் போன்றவர்களின் குரல்கள் திரிபுவாதிகளுக்கு எதிராக ஒங்கி ஒலித்தன. 1916ஆம் ஆண்டு மே தினமானது பல நாடுகளில் தொழிலாளர்கள் பழைமையான தலைமைத்துவ செல்வாக்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதை தெளிவாக காட்டியது. இதேவேளை, யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதும் தொழிலாளர் கட்சியின் வலியுறுத்தலின் விளைவால் ஐக்கிய அமெரிக்காவில் மேதினம் நிறுத்தப்படாமல் நடைபெற்றது.

முடிவுரை
இவ்வாறு தோற்றம் பெற்று வளர்ந்த மேதினமானது இன்றும் பல்வேறு போராட்டங்களை வேண்டி நிற்கின்றது. உலகமயமாக்கல், நவகாலனித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம் எனப்பல கொடிய கைகள் எம்கழுத்தை நெறிக்கின்றன. இறுதியாய்,
“மேதினமானது முதலாளித்துவவாதிகள் மனதில் பயத்தை உருவாக்கும் ஒரு தினமாகவும், உழைக்கும் மக்களின் மனங்களில் நம்பிக்கை விதைக்கும் தினமாகவும் இருக்கின்றது. உலகத் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இப்பொழுது வலுடைந்து வருவதை அவதானிக்க முடியும். மிகப்பெரிய சாதனைகளுக்கும் வெற்றிகளுக்குமான பாதை மிக தெளிவாக தெரிகின்றது. உலகின் எதிர்காலம் கம்யூனிசத்தின் கைகளிலேயே உள்ளது.”
(1923 மேதினத்திற்காக சி.ஈ. ரூதன்பேர்க்)

நன்றி- அ. செஞ்ஞாயிறு (பயில்நிலம் மே- 2005)

Comments

  1. முயற்சி எடுத்து எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற