Skip to main content

நூற்றாண்டுகளை நோக்கி பயணிக்கும் ஒரு புரட்சியின் கதை

ஒக்டோபர் புரட்சியின் (ரஷ்யப் புரட்சி) நினைவாக முற்கூட்டியே எழுதப்பட்டது.
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்ததது பார்: குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்
அடிமைக்குத் தளையில்லை.யாருமிப்போது
அடிமையில்லை. அறிக! என்றார்
இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுகமாதே!
-பாரதி (புதிய ரஷ்யா)-
முதலாளித்துவத்தின் பிறப்பு, வளர்ச்சி, அதன் பயணங்கள், அதன் வீழ்ச்சி என்று அனைத்தையும் தனது “மூலதனம்” என்ற நூலிலே விபரித்துள்ள கார்ல் மாக்ஸ், முதலாளித்துவத்தின் அழிவில்தான் சோஷலிசம் மலரும் என்று கூறுகின்றார். அந்த முதலாளித்துவத்தின் அழிவில் சோஷலிசம் பிறந்தமைக்கு ஒரு உதாரணம் தான் ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சி. எனினும், மீண்டும் முதலாளித்துவம் முன்னெழுந்து கார்ல் மாக்ஸ் கற்பனை செய்துள்ளதை விட அதிக வீரியத்துடன் காணப்படுகின்ற போதிலும், இந்த முதலாளித்துவச் சமூகம் ஒழிந்து சோஷலிச சமூகம் உருவாகுவதற்கான காலம் அண்மித்துள்ளமையை முதலாளித்துவத்தின் பேறுகளால் தோன்றியுள்ள உலக அழிவுகள் எமக்கு உணர்த்துகின்றன.

ரஷ்யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் உச்சநிலையை அடைந்து சோவியத் குடியரசு உருவாகிய வருடம் 1917 ஆகும். இந்த ஆண்டில் இரண்டு புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்ற புரட்சியே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 1917ஆம் ஆண்டு பெப்பரவரி 23ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற புரட்சியின் போது பல தசாப்தங்களாக கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த ஜார் மன்னராட்சி முறைமை முடிவுக்கு வந்தது. எனினும், அதனைத் தொடர்ந்து வந்த ஆட்சி ஜார் மன்னர் ஆட்சியில் இருந்து வேறுபடாத, அதேபோன்றதோர் ஆட்சிமுறையையே பின்பற்றியது.

இரண்டாவது புரட்சி, ஆயுதம் ஏந்திய புரட்சியாகும். ஒக்டோபர் 24,25ஆம் திகதிகளில் நடைபெற்ற புரட்சியாகும். ஜார் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போல்ஷ்விக்குகளின் செஞ்சேனை மேற்கொண்ட புரட்சி இது. இந்த புரட்சியே ரஷ்யாவின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறவுமுறைகளை மாற்றியமைத்த புரட்சியாகும். இந்த புரட்சி ஒக்டோபர் புரட்சி அல்லது போல்ஷ்விக் புரட்சி என்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

பின்னணி
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ரஷ்யா ஜார் மன்னர் பரம்பரையின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்த காலப்பகுதியில் மிகவும் மோசமான பொருளாதார, சமூக சூழலை ரஷ்ய மக்கள் அனுபவித்து வந்தனர். 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும், இந்த மன்னர்களுக்கு எதிரான போராட்டங்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்டன. இவற்றில் 1825ஆம் ஆண்டு நிக்கலஸ் மன்னருக்கு எதிராக நடைபெற்ற போராட்டமும், 1905ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டமும் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியன. எனினும், இவை இரண்டுமே தோல்வியில் நிறைவுற்றன. இந்த போராட்டங்கள் சட்டப்பூர்வமான அரசாட்சியை உருவாக்குவது தொடர்பிலேயே முன்னெடுக்கப்பட்டன. முதலாவது உலகப் போரின் (1914-1918) போதான ரஷ்ய அரசின் நடவடிக்கைகளில் காணப்பட்ட மோசமான திட்டமிடல்களும், ஊழல்களும் மீண்டும் மக்கள் புரட்சிக்கான தேவையை உருவாக்கியது.

பெப்ரவரி புரட்சி
ஜார் மன்னராட்சி முறைமையை முடிவுக்கு கொண்டு வரும் புரட்சியாக 1917 பெப்ரவரி புரட்சி காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக காணப்பட்டமையால், முதலாவது உலக யுத்தத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தமையும் ஜார் மன்னராட்சி ஒழிக்கப்பட காரணமாக அமைந்திருந்தது. ரஷ்யாவில் மனித வளங்கள் நிறைந்திருந்த போதிலும், போருக்காக அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 15மில்லியன் மக்களுக்கு ஆயுத மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்குவதற்கான வளங்கள் இல்லாதிருந்தது. வெகு சில தொழிற்சாலைகளே ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டன. அத்துடன், மக்கள் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டமையால் உள்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் போரிற்கு சென்றவர்களுக்கு உணவு விநியோகம் செய்வதற்கான வசதிகளும் இல்லாது போனது. இதனால் முதலாவது உலகப் போரில் ஈடுபட்டிருந்த நாடுகளிலேயே அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடாக ரஷ்யா மாறியது. இதன் மறுபுறத்தில் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் நகரங்களில் பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலைமைகளை பயன்படுத்திக் கொண்ட ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் சபையான டூமா, இரண்டாம் நிக்கலஸ் தலைமையிலான ஜார் அரசாங்கத்தின் திட்டமற்ற யுத்த பங்கு குறித்து அதிருப்தியை வெளியிட்டது. ஆனால் அரசாங்கம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் அனைத்து சிறிய கட்சிகளும் இணைந்து யுத்தத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட வறுமை, பட்டினி என்பன அரசாங்கத்திற்கு எதிரான உடனடியான புதிய ஜனநாயகத்துடனான புரட்சியின் தேவையை வலியுறுத்தி நின்றன. இதன் விளைவாக 1915ஆம் ஆண்டு லிபரல் கட்சிகள் அனைத்தும் இணைந்து பெரும்பான்மை பலத்துடன் கட்சியொன்றை அமைத்தன. 1916ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இந்த புதிய கட்சி யுத்தத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு தொடருமானால் நாட்டின் எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டுவிடும் என்று இரண்டாம் நிக்கலஸ் மன்னனுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதனையும் இரண்டாம் நிக்கலஸ் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்டில் தொடர்ந்த வறுமை மற்றும் பட்டினியின் காரணமாக அடிப்படை உணவு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாண் கோரி 1917ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 23பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் இடம்பெற்றன. இந்த போராட்டங்களில் சுமார் 90,000 பொதுமக்கள் கலந்துகொண்டனர். மக்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், பாதைகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பெப்பரவரி 24ஆம் திகதி பெட்ரோகிராட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் “யுத்தத்தில் இருந்து வாபஸ் வாங்கு”, “எதேச்சாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வா” என்ற கோரிக்கைகளை முழங்கியவாறு வீதிகளை வலம் வந்தனர். பெப்ரவரி 25ஆம் திகதி போராட்டம் தலைநகரம் முழுவதிலும் பரவியது. இந்த இரண்டு நாட்களும் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பல பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றன. பொலிஸ் நிலையங்கள் சிலவற்றை கைப்பற்றிய மக்கள் ஆயுதங்களை கைப்பற்றி, பொலிஸ் நிலையங்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

பெப்ரவரி 26ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர். இதன்போது தொழிலாளர்களும், இராணுவத்தினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். எனினும், தளராத தொழிலாளர்கள் மீண்டும், மீண்டும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டாம் நிக்கலஸ் மன்னன் டூமாவை கலைத்தான். இதனை அடுத்து டூமா உறுப்பினர்கள் இரகசியமாக கூடி தனியானதோர் குழுவை அமைத்தனர். இதேவேளை, தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. பெப்ரவரி 27ஆம் திகதி இடைவிடாத போராட்டத்தில் 150,000 தொழிலாளர்களின் உதவியுடன் தலைநகரம் தொழிலாளர்கள் வசமானது. இந்த போராட்டத்தின் போது சுமார் 1,500 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நிக்கலஸ் மன்னனின் ஆட்சி உடனடியாக கலைக்கப்பட்டது. பெப்ரவரி 28ஆம் திகதி நிக்கலஸ் மன்னனின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத் தமது அதிகாரங்களை நிறுவி ரஷ்யா முழுவதும் பரவச் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், அது அந்த சந்தர்ப்பங்களை தவறவிட்டது. பெட்ரோகிராட் சோவியத்தில் அங்கம் வகித்த பலர் தொழிலாளர் தரப்பினர்களாக இருந்தமையினால், முதலாம் உலக யுத்தத்தில் தமது நாட்டின் பங்கை அவர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அரசாங்கத்தில் தடுமாற்றமான நிலை உருவெடுத்தது. இந்த நிலையில் நாடு தாண்டி வாழ்ந்து வந்த போல்ஷ்விக்குகளின் தலைவர் விளாடிமர் இலியச் லெனின் ஏப்ரல் 16ஆம் திகதி தாய்நாட்டிற்கு திரும்பி, அப்போதைய அரசாங்கத்திடம் அவர் சில கோரிக்கைகளை முன்வைத்தார். நிலபிரபுக்களிடம் இருந்து நிலங்கள் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் சார்ந்த தொழிற்றுறை கட்டியமைக்கப்பட வேண்டும். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளே அவை. பெட்ரோகிராட் சோவியத்தில் போல்ஷ்விக்குகள் சிறுபான்மையினராகவும், மென்ஷ்விக்குகளே பெரும்பான்மையானவர்களாகவும் இருந்தனர். அதனால், ரஷ்யாவின் அதிகாரம் மிக்க அரசாங்கமாக உருவெடுத்த பெட்ரோகிராட் சோவியத், யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதையே பிரதான இலக்காகக் கொண்டிருந்தது.

இதன் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் ஒரு பதற்றநிலை காணப்பட்டது. இது புதிய அரசாங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்நிலையை தோற்றுவித்தது.

எனினும், மார்ச் 6ஆம் திகதி பெட்ரோகிராட் சோவியத் வெளியிட்ட அறிவிப்பில் இறுதி வெற்றி வரை முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு தொடரும் என குறிப்பிடப்பட்டது. ரஷ்யாவின் பெரும்பான்மையான மக்கள் இந்த யுத்தத்தில் விருப்பம் இன்றி இருந்தமையின் விளைவாக மீண்டும் ஒரு முரண்பாடு நாட்டுக்குள் உருவெடுத்தது. அரசியல் நிர்வாக மாற்றமே ரஷ்ய மக்களின் உடனடி தேவையாக கருதப்பட்டது.

ரஷ்யாவை வந்தடைந்த லெனின் போல்ஷ்விக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டார். இதன் போது உரையாற்றிய அவர், யுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போல்ஷ்விக்குகள் சிறுபான்மையினராக இருந்த போதிலும், பெரும்பான்மை பலம் தொழிலாளர்களின் உதவியுடன் சிறப்பான திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் அதிகாரத்தை மக்கள் மயப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டார். போல்ஷ்விக்குகளின் போராட்டம் “சமாதானம், நிலம், உணவு” என்பதை குறிக்கோளாக கொண்ட கொள்கையாக மாற்றம் பெற்றது.

இந்த போராட்டங்களின் மத்தியில் ஜூன் 3ஆம் திகதி சோவியத்தில் அமைக்கப்பட்ட அகில ரஷ்ய காங்கிரஸிலும் போல்ஷ்விக்குகள் சிறுபான்மை பலத்தையே பெற்றனர். மென்ஷ்விக்குகளே பெரும்பான்மை பலமுடையவர்களாக இருந்தனர். ஒரு பக்கத்தில் அபிவிருத்தி மற்றும் சமூக முரண்பாடுகள் நாடெங்கிலும் பரவத்தொடங்கியது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் பல மூடப்பட்டதுடன், வறுமையும், பட்டினியும் நாடெங்கும் பரவியது. அரசாங்கம் உடனடியாக மக்கள் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டங்களில் குதித்தனர்.

இந்த நிலையில் யுத்த களத்திற்கு சென்ற வீரர்கள், யுத்தத்தை கைவிட்டு நாட்டுக்கு திரும்பினர். ஜுன் மாதம் 18ஆம் திகதி போல்ஷ்விக்குகளின் தலைமையில் சுமார் 500,000மக்கள் பெட்ரோகிராட் வீதியில் இறங்கி தற்காலிக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சற்றுநிதானித்துக் கொண்ட அரசாங்கம், தொழிலாளர்கள் கூடுவதற்கு தடை விதித்தது. லெனினை கைது செய்யுமாறு பணித்தது. போல்ஷ்விக் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார் அரசாங்கத்தினைப் போன்றதொரு எதேச்சாதிகார முறையை புதிய அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியது. எதிர்கால நலன்கருதி ஸ்டாலின் மற்றும் போல்ஷ்விக் தலைவர்களின் வேண்டுகோளின் பேரில் லெனின் பத்திரமாக இரகசிய இடமொன்றில் தங்கவைக்கப்பட்டார். ஆகஸ்ட் 8ஆம் திகதி பாதுகாப்புக்காக மாறுவேடத்தில் பின்லாந்தை சென்றடைந்தார் லெனின். இந்த சந்தர்ப்பத்தில் போல்ஷ்விக்குகளை சரியான முறையில் வழிநடத்தி விரைவான போராட்டம் ஒன்றுக்கு தயார்படுத்தும் பணியில் மிகவும் சிரத்தையாக ஈடுபட்டிருந்தவர் ஸ்டாலின். தொழிலாளர்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரிப்பதற்கு இந்த காலம் மிகுந்த பயனுடையதாக இருந்தது. அது மாத்திரமல்லாது, லெனினுக்கு அடுத்து சோவியத் அரசை நிர்வாகிக்கக் கூடிய ஆளுமைப் பண்பு நிறைந்தவர் ஸ்டாலின் என்பது வெளிப்படையான காலப்பகுதி அது. லெனினின் ஆலோசனையுடன் இறுதி யுத்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் ஸ்டாலின்.

ஒக்டோபர் 10ஆம் திகதி மீண்டும் ரஷ்யாவை வந்தடைந்தார் லெனின். பெட்ரோகிராட்டிலே, லெனின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்ட செஞ்சேனை, தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது. அரசாங்க அலுவலகங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள், ரயில்வே நிலையம், அரசாங்க வங்கிகள் என்று அனைத்துமே செஞ்சேனை வசமானது. ஸ்டாலினின் மிகத் துல்லியமான திட்டமிடல்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்காலிக அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தப்பியோடி ஜார் மன்னர்களின் ஆடம்பர இல்லமாக இருந்த குளிர்கால அரண்மனையில் ஒளிந்துகொண்டனர். ஒக்டோபர் 25ஆம் திகதி ரஷ்யாவின் ஆட்சி அதிகாரம் புரட்சிக் குழுவின் கையில் வந்துவிட்டதை, போல்ஷ்விக்குகளின் மத்திய குழு இயங்கிவந்த ஸ்மோல்னி மாளிகையில் வைத்து லெனின் அறிவித்தார். ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு குளிர்கால அரண்மனையை சுற்றிவளைத்த செஞ்சேனை அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரையும் கைது செய்தது. ஓக்டோபர் 26ஆம் திகதி சுதந்திர சோவியத்தில் பொதுமக்கள் மத்தியில் புரட்சியின் வெற்றியை அறிவிக்க வந்த லெனின் இரண்டு ஆணைகளை மக்கள் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தார். முதலாம் உலக யுத்தத்தில் இருந்து ரஷ்யா விலகிக் கொள்வது மற்றும் நிலம் மீதான தனியுடமை நீக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு அவற்றை பகிர்ந்தளிப்பது. புரட்சியின் வெற்றி ஆடம்பரங்கள், பட்டாசுகள், கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி சோவியத் அரசு மலர்ந்தது. இதன் பின்னர் தற்காலிக அரசாங்கத்தின் தலைவராக இருந்த க்ரன்ஸ்கி தப்பிச் சென்ற படைகளை சேர்த்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற செய்த முயற்சியும் லெனினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. செஞ்சேனைகள் அணிவகுக்க சோவியத் அரசு ஒரு நீண்டகால சோஷலிச அரசியல் அனுபவத்தை ரஷ்ய மக்களுக்கு வழங்கியது. உலக நாடுகள் பலவற்றின் விடுதலை உணர்வுக்கான படிப்பினையாகவும் இது விளங்குகின்றது.

உலகெங்கும் அடக்கி, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வான சுயநிர்ணயத்திற்கு சரியான வரைவிலக்கணத்தை கொடுத்து நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் லெனின் ஆவார். சோவியத் அரசு இன்று சிதறுண்டுள்ளதாகவும், அது கம்யூனிசத்தின் தோல்வியாகவும் எதிரிகள் மார்தட்டி பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், இன்று தமது உரிமைகள் மறுக்கப்பட்டு, அடக்கி, ஒடுக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக இருந்து வரும் இலங்கை உட்பட பல நாடுகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்பதனை ஒதுக்கி வைத்துவிட்டு நிரந்தரமான முடிவினை எட்டமுடியாது என்பதனையும், பிரிந்து செல்வதற்கான உரிமையுடன் இணைதல் என்ற சுயநிர்ணயத்தின் நடைமுறைக்கு சோவியத் அரசு காலம் மறையாத உதாரணமாக இருப்பதையும் அவர்களால் ஒருபோதும் மறுக்க முடியாது.
'அராஜகம் பிறந்தநாள் தொடக்கம் சுரண்டலுக்கெதிரான எல்லாவிதமான வார்த்தை விளக்கங்களையும் தந்ததைத் தவிர வேறெதனையும் சாதிக்கவில்லை. அதனோடு அவர்கள் ஏன் முதலாளித்துவச் சுரண்டல் நடைபெறுகின்றது? ஏன் முதலாளித்துவச் சமூகமுறை உருவாகுகின்றது? ஏன் முதலாளித்துவம், சோஷலிசமாக அபிவிருத்தியடைய வேண்டும்? என்பதன் கட்டாய விதிகளையும், தொழிலாள வர்க்கப் போராட்டமே சோஷலிச சமூகத்தை படைக்க வல்லது என்பதையும் விளக்கிக் கூறுவதில்லை. அவர்களின் மனோநிலையானது புத்திஜீவிகளினதும் உதிரிதொழிலாளிகளினதும் மனோநிலையேதவிர, தொழிலாள வர்க்க மனோநிலையல்ல.'
-லெனின்-

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….