Skip to main content

405

மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் விறைக்க ஒரு உரைபொழுதும் கடவாது,

பனி
நிறைத்த பச்சைநிற
பசிபோக்கும் தாவரங்களின்
தலையொடித்து உயிர் வாழ,
405க்காய்
உழைப்பு சேர்க்கும்,
சிறகுகளற்ற
மலைக்குருவி நான்...
என் கூட்டுக்குள்ளே இரையிருக்கும்
ஒரு நாளின் இரு பொழுதில்,
சில நேரம் ஒரு பொழுதில்,
சில நேரம் வெறும் வயிறாய்,

ஆறிய கஞ்சிக்கும் வழியில்லை இங்கே,
ஏதோ தேயிலை தரும் சாயத்தை
உயிர் கடத்த உழுகின்றோம்…

உலகெல்லாம்
பல பேராய் பொழுதிறங்கி
பேச்சளக்க கொஞ்சம்,
களைப்பிறக்க
நாம் பறிந்த கொழுந்துகள்
உங்கள் கைகளில் தேயிலை தூள்களாக,
பல சுவையேற்றப்பட்டு,

இன்னும் நாங்கள்
சீனியற்ற வெறுஞ்சாயத்தை
சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

என்
அப்பன்,
அவன் அப்பன்,
அவனுக்கும் அப்பன்,
இன்னும்….

என் பிள்ளை,
அவன் பிள்ளை,
அவனுக்கும் பிள்ளை
இன்னும்…..

முடிந்ததும்,
தொடர்வதும்….

அந்த சில சதுர அடி அறையில்,
அடைபட்டு
நா அடக்கப்பட்டு…..
உழைத்து
நிமிர்ந்த, திரண்ட தோள்கள் இங்கே,
எட்டாய் வளைந்து....

ஊதியம் உயர்த்திக் கேட்கும்,
பின் 405இல்
ஏதோ ஒரு கை அடக்கும்…
ஊர்க்காரன் தொழிற்சங்கத்தில்
சந்தா செலுத்தும்….
களவாய் விற்கின்ற
கள் உண்டு களிக்கும்…
பின் மண்ணோடு மண்ணாகி போகும்.

இதுதான் தொடரும்….

கவ்வாத்து கத்தி
கதிரறுக்கும்,
கொழுந்து செடிகளிலே களையறுக்கும்,
மலை செதுக்கும்
என்றறிவார் உலகத்தார்…

உழைப்பு உறிஞ்சு
உயிர்
வாழும்
பணந்தின்னி அட்டைகளை
பிணமாக்கும் நாள் வருமோ!
அன்றில்
பயம் வருமோ!
மலையகத்தின்
மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் நிலைக்க நாள் வருமோ!

பொழுதெழுந்து
கொழுந்தெடுக்க போறேன்…
பொழுதெழுமா நம் வாழ்வில்…
405இல் நானும்….

(இலண்டனில் இருந்து வெளிவரவிருந்த தீபாவளி மலர் ஒன்றிற்காக கடந்த மாதம் எழுதிய கவிதை. பலநாட்கள் கழிந்த நிலையில், இன்று மீண்டும் வாசித்த போது பிடித்திருந்தது. )

Comments

  1. வாழ்த்துக்கள் .....

    மனதை தொட்ட வரிஇகள்...

    இன்னும் நாங்கள்
    சீனியற்ற வெறுஞ்சாயத்தை
    சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

    வாழ்க வளமுடன் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….