தனிமை துரத்தும் நொடிகளில் எழுதத் தொடங்கி எழுதி முடிக்காத ஒரு கடிதம் உன் பிடிவாத மறுப்பால் வாசிக்கப்படாமல் இதய அறையின் இருட்டறையில்… நினைவுகளாய் நெருங்கி வெறுப்புக்களாய் விலகிச் செல்லும் புள்ளி விஸ்வரூபமெடுக்கின்றது ஆழ்மனதில் அலையடிக்கும் கணப்பொழுதில்…. இரண்டாம் தாயாய் என் வாழ்வில் உனை இணைக்கும் காதல் போரில் ஆயுதங்களின் கடிவாளங்களாய் இறுகிக் கிடக்கும் உன் மனதை தாக்க முடியாமல் அந்தரத்தில் தடுமாறுகின்றது என் நினைவு….. சூறாவளியாய் சுழன்றடித்து பிரக்ஞையற்றதாக்கிய உன் கண் இமைக்கும் நொடிக்குள் பார்வை சொன்ன செய்தி பிரதியெடுத்து பதிவானது என் எண்ணக் கோப்பில்….. உன் இமை மடிந்த கணங்களும், இதழ் விரிந்த நொடிகளும் இறக்க விடாமல் இயக்கிக் கொண்டிருக்கின்றது உன் மீதான என் காதலை…… பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை. தினந்தோறும் நாட்குறிப்பேட்டில் எழுதும் பழக்கம். ஆகஸ்ட் மாத பொழுதொன்றில் எழுதியிருக்கின்றேன். வாசித்துப் பார்த்தேன். பிடித்தது. பகிர்ந்து கொள்கின்றேன்.
நான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...