Skip to main content

பாராளுமன்றத் தேர்தல் திறந்துவிட்டுள்ள சந்தர்ப்பங்கள்....


பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆளுங் கட்சியின் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பான தகவல்கள் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளன. புதிய வேட்பாளர்கள் பலர் களமிறங்கவுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டலாம் என்ற நிலையும் தோன்றியுள்ளது. இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடும் சற்று குழப்பமானதாகவே இருக்கின்றது. இந்த நிலையில் எஞ்சியிருக்கக் கூடிய சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடும் இதுவரை உறுதிசெய்யப்படாததாகவே இருக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய பாடத்தை கற்பித்து தந்துள்ளது. நீண்ட காலமாக இலங்கை சந்தித்த பல தேர்தல்களில் முடிவினை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கிய சிறுபான்மை வாக்குகளின் செல்வாக்கு செயலற்றுப் போன சந்தர்ப்பத்தை காணக் கூடியதாகவிருந்தது. சிறுபான்மையினரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்காமையில் இருந்து அவர்களுக்கு தேர்தலில் அல்லது தேர்தல் முறைமையில் இருக்கக் கூடிய நம்பிக்கையீனமே வெளிப்பட்டு இருக்கின்றது. அது மாத்திரமின்றி சிறுபான்மையினரின் தற்போதைய தேவை தேர்தல் அல்ல என்பதையும் அது வெளிப்படுத்தியிருக்கின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வதியும் தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் வெளியான முடிவுகளை பார்க்கும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் மாவட்டங்களின் (யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்லை, திருகோணமலை) முடிவுகளை பார்க்கும் போது பதிவுசெய்யப்பட்ட 1,983,946 வாக்காளர்களில் (யாழ் - 721,359, வன்னி-266,975, மட்டக்களப்பு-333,644, திகாமடுல்லை-420,835, திருகோணமலை-241,133) 983,077 வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்துள்ளனர். சுமார் 10 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில் 97.93சதவீத வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளாகும். இதன் மூலம் வாக்களித்தவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு முடிவினை பெற எதிர்பார்த்திருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 60.73சதவீத வாக்குகளும், வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதிக்கு 33.86சதவீத வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் மூலம் வடக்கு, கிழக்கில் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு எதுவென்பது வெளிப்படையாக தெரிகின்றது. இந்த 10 இலட்சம் வாக்காளர்களில் புலம் பெயர்ந்தவர்கள், மோதலில் உயிரிழந்தவர்கள் என்பவர்கள் உள்ளடக்கப்படும் பட்சத்திலும் சுமார் 5 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்யலாம். அந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி என்பதனை மாற்றியமைத்திருக்க முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள முடிகின்றது.


1958ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தமும், 1966ஆம் ஆண்டு பண்டா-டட்லி ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படுவதற்கு ஏதுவாய் அமைந்த தேர்தல்களில் சிறுபான்மை வாக்குகள் வெற்றி பெறுவதில் எவ்வளவு ஆதிக்கத்தை செலுத்தின என்பதனை வெளிப்படையாக உணர்த்துகின்றன. எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிரான வெற்றியை அறிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “இலங்கையில் இனிமேல் சிறுபான்மையினர் என்ற பிரிவினர் இல்லை” என்று அறிவித்தமையும், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் விருப்பத்துக்கு மாறான முடிவு வெளிவந்துள்ளமையும் ஏதோ ஒன்றை உணர்த்தியிருக்கின்றன. 30 ஆண்டுகளாக யுத்தம், இடம்பெயர்வு, யுத்தம், இடம்பெயர்வு என்று மாறிமாறி துன்பங்களை அனுபவித்து வந்த வடக்கு, கிழக்கு மக்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒருவராக இருக்கும் இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதியாக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையின் ஊடாக வெளியாகும் செய்தி என்ன? அவர்கள் முழுமையான மாற்றம் ஒன்றை விரும்புகின்றார்கள் என்ற செய்தியா? அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் குறித்த நம்பிக்கையா? என்பது கேள்வியாக மாத்திரமே உள்ளது.

இவ்வாறு தேர்தல் முடிவுகளை கவனத்திற் கொண்டு குறித்த பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சிறந்த முடிவொன்றை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பாராளுமன்றத் தேர்தலை கொள்ளலாம்.

ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி என யாருடனும் இணையாது தனித்து சிறுபான்மை கட்சிகள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் அடுத்த பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கவுள்ள கட்சி ஆதரவுக்காக, கட்டயாமாக இந்த சிறுபான்மை
கட்சிகளின் கூட்டமைப்பை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்களையும், நிபந்தனைகளையும் முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முடியும். அதனை விடுத்து தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவும், தமது பரம்பரையினரின் எதிர்பார்ப்புக்களை மாத்திரம் நிறைவேற்ற எண்ணியிருந்தால்…….. ???????

பாராளுமன்றத் தேர்தல் என்பது முழுமையாக நிலவுடைமையாளர்களையும், முதலாளிகளையும், வல்லரசு போட்டியிட்டு வரும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக அமைப்பு. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தின் பெறுமதியை அறிந்து கொண்டால் இதன் உண்மையான அர்த்தம் உங்களுக்கும் புரியும். அந்த அளவில் ஜனநாயகத்தை அமுல்படுத்தும் நிர்வாக அலகாக பாராளுமன்றம் எவ்வளவு தூரம் இயங்குகின்றது என்பதும் இயல்பான கேள்வியே. அதனிலும் பார்க்க இந்த முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும், ஏகாதிபத்திய நாடுகளின் கைக்கூலிகளாக உள்ளவர்களும் மக்களின் நலன் குறித்து எவ்வளவு தூரம் சிந்திப்பார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

இத்தனைக்கும் மத்தியில் சிறுபான்மை மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த பாராளுமன்றத் தேர்தல்அடிமைகளாக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெற வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்களா?. தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்ற பேதத்தை காலம் காலமாக வளர்த்து அந்த பிரிவினையில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் கைகளில் இருந்து அரசு இயந்திரத்தை பறித்தெடுத்து மக்களுக்கான உண்மையான ஜனநாயக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை சிறுபான்மை கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளுமா? ஏகாதிபத்திய பேராசைக்காக பிரதான கட்சிகளை தமது நாடுகளின் நிகழ்ச்சத்திட்டத்துக்கு அமைய ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் நாடுகளால் மறைமுகமாக அடிமைகளாக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெற வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது.

ஒரு அவசியமான அரசியல் பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. நீண்ட நாட்களாக எழுத நினைத்த பல விடயங்களை வெளிக்கொணர முயற்சித்துள்ளேன். பதிவுகள் என்பது திறந்த விவாதங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையினால் இந்த பதிவுக்கான ஆரோக்கியமான பின்னூட்டங்களை வரவேற்கின்றேன்.

Comments

  1. இன்று நாட்டிற்கு ஒரு புதிய பாதை தேவை என்பது மக்களுக்கு மெல்ல மெல்லத் தெளிவாகி வருகிறது. எனினும், மக்களைத் திரும்பவும் பாராளுமன்ற அரசியல் சந்தர்ப்பவாதத்தினுள்ளும் கருத்துள்ள எந்த அரசியல் அடிப்படையுமற்ற கூட்டணிக்குள்ளும் கொண்டு செல்கிற அரசியலிலேயே பேரினவாத அரசியல்வாதிகளும் குறுந்தேசியவாத அரசியல்வாதிகளும் சிக்குண்டு கிடக்கின்றனர். இவர்களால் நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சி அல்லா விட்டால் இன்னொரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஏகாதிபத்தியத்திற்கும் பிராந்திய மேலாதிக்கத்திற்கும் அடிமைப்படுத்த இயலுமை ஒழிய எவ்வகையான விடிவுக்கும் வழிகாட்ட இயலாது.

    பாராளுமன்ற உறுப்பினர் ஆகுவதோ ஏனைய தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படுவதோ மக்களின் ஆதரவில் அல்லது அரசியல் தெளிவின் கொள்கை விளக்கத்தின் வழிகளில் அல்ல. வர்க்கம், சாதி, ஊர், பணம், ஊழல், முறைகேடுகள் போன்றனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வெற்றியை தீர்மானிக்கின்றன. இதன் மூலம் அத்தகையவர்களே தலைமை தாங்குபவர்களாகக் காட்சிப்படுத்தப் படவும் செய்கின்றனர். இது 62 வருட முதலாளித்து பாராளுமன்ற ஆட்சி முறையின் இலட்சணம் ஆகும். தமிழ்த் தலைமைகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாராளு மன்றம் – ஆயுத நடவடிக்கைகள் – பாராளுமன்றம் எனச் சுழன்ற வண்ணமே உள்ளனர். இத்தகையவர்களுக்கு ஆதிக்க அரசியல், பாராளுமன்ற பதவிகள், பேரப்பேச்சுக்கள் போன்றவற்றிற்கு அப்பால் செல்ல முடிவதில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் காணப்படும் இன வர்க்க சாதி பெண் ஒடுக்குமுறை களுக்கு எதிராக கொள்கை வைக்கவோ அவற்றுக் குரிய போராட்ட வழிமுறைகளை முன்னெடுக்கவோ தாயாராக வில்லை. இனிமேலும் புதிய மாற்றுக் கொள்கைக்கோ நடைமுறைக்கோ தயாராக மாட்டார்கள்.

    இந்த நிலையில் இருந்து தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் எவ்வகையிலும் மாற்றம் அடையப் போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசிய இனத்தின் முன்னால் ஒரு பாரிய அரசியல் கேள்வி எழுந்து நிற்கிறது. தொடர்ந்தும் செக்கு இழுத்த பாதையில் தமிழ்த் தேசிய வாத பிற்போக்கு தலைமைகளுக்குப் பின்னால் தலையாட்டி மாடுகள் போன்று அல்லது செம்மறியாட்டுக்கூட்ட மனோநிலையில் மேய்ப்பர்கள் காட்டும் இருட்டு அரசியலுக்குள் தொடர்ந்து செல்வதா அல்லது அதனை நிராகரித்த புதிய அரசியல் வழிமுறைகளை நாடுவதா என்பதே அக் கேள்வியாகும். கடந்த கால தமிழ்த் தேசியவாத அரசியல் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்ட வரலாற்று நிகழ்வுகளும் ஆழ்ந்து நோக்கப்படல் வேண்டும். அவற்றிலிருந்து உரிய அனுபவங்களும் பட்டறிவுகளும் பெறப்பட்ட மீளாய்வும் சுய விமர்சனங்களும் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுவது அவசியம். அறணைத்தனமாக அன்றன்று மறந்துவிட்டு அரசியல் ஆதிக்க மேய்ப்பர்களின் பின்னால் ஓடும் அரசியல் கலாச்சாரத்திற்கு தமிழ் மக்கள் முற்றுப் புள்ளியிடல் வேண்டும்.

    தமிழ்த் தேசிய இனத்தின் இன்றைய அவல நிலையையும் இருப்பையும் எதிர்காலத்திற்குரிய தொலைநோக்குத் திட்டங்களையும் வகுக்கக் கூடிய ஒரு பரந்து பட்ட அரசியல் விவாதம் அவசியம். இதனை, தனியே ஒரு கட்சி அல்லது சில படித்த மேதாவிகள் அல்லது புலம்பெயர்ந்த உயர்வர்க்க கனவான்கள் என்போரால் செய்ய முடியாது.

    ReplyDelete
  2. ஆழமான கருத்து. உங்களுடன் முழுமையாக உடன்படுகின்றேன்.

    நிச்சயமாக எல்லா காலங்களிலும், தாங்களே ஆட்சியில் நிலைக்க வேண்டும் என்ற சுயலாபங் கருதிய நிலைப்பாட்டில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பே பாராளுமன்றம் என்பது. இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ள அவசியமான தேவை. இன, மத பாரபட்சங்களை கடந்து மக்கள் ஒன்றிணையும் சந்தர்ப்பம் வெகுவிரைவில் வரும். அதற்கான சூழலும் பொருந்தியுள்ளது. அப்போது ஏகாதிபத்திய கைக்க்கூலிகளாக, ஏகாதிபத்திய நாடுகளின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக செயற்படும் தலைவர்கள் எல்லாம் விரட்டியடிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  3. பாராளுமன்றத் தேர்தலை தவறானது எனக் கூறும் நீங்கள், அதற்கு பதிலாக வேறு முறைகளை முன்வைக்க விரும்புகின்றீர்களா? தொடர்ந்து மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் எதுவும் நடக்காது.

    ReplyDelete
  4. agree with your some points. but do you think these minority parties will get together. its really a day dream friend. its all our fate.

    ReplyDelete
  5. நியாயம்தாங்க

    ReplyDelete
  6. //பாராளுமன்றத் தேர்தலை தவறானது எனக் கூறும் நீங்கள், அதற்கு பதிலாக வேறு முறைகளை முன்வைக்க விரும்புகின்றீர்களா? தொடர்ந்து மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் எதுவும் நடக்காது.//

    பாராளுமன்ற தேர்தல் முறைமைக்குப் பதிலான மற்றுமொரு முறைமையை முன்வைக்க முடியும். முதலாவது பின்னூட்டத்தில் இதற்கான பதில் இருக்கின்றது.

    "கடந்த கால தமிழ்த் தேசியவாத அரசியல் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்ட வரலாற்று நிகழ்வுகளும் ஆழ்ந்து நோக்கப்படல் வேண்டும். அவற்றிலிருந்து உரிய அனுபவங்களும் பட்டறிவுகளும் பெறப்பட்ட மீளாய்வும் சுய விமர்சனங்களும் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுவது அவசியம். அறணைத்தனமாக அன்றன்று மறந்துவிட்டு அரசியல் ஆதிக்க மேய்ப்பர்களின் பின்னால் ஓடும் அரசியல் கலாச்சாரத்திற்கு தமிழ் மக்கள் முற்றுப் புள்ளியிடல் வேண்டும்."

    ReplyDelete
  7. //agree with your some points. but do you think these minority parties will get together. its really a day dream friend. its all our fate.//

    I mentioned that this is my view. And I am not forcing the readers to accept. But i hope, the person reading this article will forcibly push through think our current and future political status.We always put all our mistakes naming FATE. When we going to learn from our mistakes? When we all going to break all these barriers? these are the questions you should ask yourself. Definitely Minority Parties will not gather under one Party. If suppose they gathered, it wont be the final phase. it is a start. next phase of them is to break these Parliament system. Anyhow thank you for your comments.

    ReplyDelete
  8. //V.A.S.SANGAR
    நியாயம்தாங்க//

    நன்றிங்க!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….