Skip to main content

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்

வாழ்க்கையின் தீவிரமான வாசகனாக மாறிவிடும் பொழுதுகளில் எங்களுக்குள் கேள்வியை எழுப்பிவிடுகின்ற பல நூல்கள் உறக்கங்களை கொள்ளை கொண்டு மறையாமல் தொடரும் நினைவுகளாய் நிலைகொண்டு விடுகின்றன.
ரூத் தனது சிட்டுக்குருவிக்கு சொல்வது போல் ‘அவள் நினைவு, போராட்டத்திலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றது’. தீண்டாத வசந்தத்தை ஒரு முறை வாசித்தவர்கள் கூட நிலாத்திண்ணையில் தொடங்கி ஆந்திரா முழுவதும் சுற்றி வந்து, எல்லண்ணாவில் தொடங்கி ஜெசி வரை எவரையும் மறக்க மாட்டார்கள். முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு என் நண்பர் ஒருவர் எனக்கு இந்த நூலை பரிந்துரைத்தார். இரவலாக வாங்கி அந்த நாவலை இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு உடனே எனக்கான பிரதியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர் பலருக்கு அந்த நாவலை வாசிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளேன். பல நாட்கள் நாங்கள் இருவரும் அந்த நாவலை பற்றி விவாதித்திருக்கின்றோம். அப்போது, தீண்டாத வசந்தம் நாவல் என்பது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்களை சித்திரிக்கும் ஒரு கதை என்பதாக மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த பயில்நிலம் என்ற சஞ்சிகையின் வாசகமாக நாங்கள் இணங்கி ஏற்றுக் கொண்ட “மாற்றங்களை வேண்டி” என்ற சொற்றொடர் இந்த நாவலில் இருந்து பெறப்பட்டதுதான். பல வருடங்களின் மற்றுமொரு நண்பருடன் இந்த நாவல் பற்றி கலந்துரையாடியதில் மீண்டும் அந்த நாவலை வாசித்து விட வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. இரண்டாவது முறையாக தீண்டாத வசந்தத்தை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து புதிய பல உண்மைகளும், எண்ணங்களும் என்னுள் உருவாக ஆரம்பித்தன. கடல் கடந்த ஒரு நாட்டில் தாழ்த்தப்பட்டதாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்று மாத்திரமே நினைத்திருந்த நாவல், நமது நாட்டிலும் ஆங்காங்கு காணப்படும் மறைமுகமான சாதிப் பிரச்சினைகளை எனக்கு நினைவுபடுத்தியது. ஒரு புத்தகம் என்பதை மீண்டும், மீண்டும் வாசிக்கும் போது ஒவ்வொரு முறையும் புதிய விடயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன். தீண்டாத வசந்தம், ஜி. கல்யாணராவினால் தெலுங்கில் எழுதப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு. தமிழில் ஏ.ஜி. எத்திராஜூலு மொழிபெயர்த்துள்ளார்.

ரூத் என்பவர் தமது கணவர் ரூபெனின் மூதாதையர்களின் வாழ்க்கை நிலையையும், மேல்சாதி சமூகத்தினரால் தீண்டாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டமையினால் அவர்கள் பட்ட இன்னல்களையும் தீண்டாத வசந்தம் என்ற நாவல் வெளிப்படுத்துகின்றது. நிலாத்திண்ணை கிராமத்தில் பிச்சை, லிங்காலு பிள்ளையான எல்லண்ணா, அத்தை பூதேவியின் வளர்ப்பில் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, உறுமி நாகண்ணாவை சந்தித்து, கூத்தின் மேலும் அக்கறை கொண்டவனாகி, சுபத்திராவை மணந்து, நாகண்ணா இறக்க, தாழ்த்தப்பட்ட மக்களின் சோகங்களையும், அவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயங்களையும் ஊர் ஊராகச் சென்று பாடல்களாக கட்டி, பறைச்சாமியராக, அவரது பிள்ளை சிவய்யா, சசிரேகாவை மணந்து நிலாத்திண்ணை சார்ந்த கிராமங்களில் பட்டினி, பஞ்சம், காலரா போன்றன அதிகரித்த நிலையில், பெற்றோர்களை இழந்து அவர்களை குழிகளில் போட்டு புதைத்துவிட்டு, ஊர் பெயர்ந்து, மதம் மாறி சீமோனாகி, ரூபென் என்ற பிள்ளை பெற்று, தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடி, உயிரிழக்க, மருத்துவமனை போதகராக இருக்கும் ரூபென், அறிந்தவர்கள் ஊடாக தமது மூல பிறப்பிடமான நிலாத்திண்ணை சென்று தமது மூதாதையர்களின் வாழ்க்கைச் சோகங்களை கற்று, ரூத்தை மணந்து, ரூபெனின் பிள்ளைகள் இம்மானுவெல், ரோசி, அவர்களில் இம்மானுவெல் நக்சலைட் ஆகி, அவரின் பிள்ளையான ஜெசி, ரோசியின் பிள்ளை ரூபி மேல் காதல் கொண்டு, அவளை மணந்து, இருவரும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புகின்றார்கள். இதுதான் நிலாத்திண்ணையில் ஆரம்பிக்கும் தீண்டாத வசந்தம் நாவலின் சுருக்கமான கதை. இந்த நாவலில் இன்னும் பல முக்கியமான பாத்திரங்கள் வந்து நம்மை ஆக்கிரமித்துச் செல்கின்றன.

என்று ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக இந்த மக்கள் தமது அடையாளத்தையும், தமது அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களையும் சந்தித்தார்கள் என்பதனை ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக ஜி. கல்யாணராவ் எமக்கு கொண்டு வருகின்றார். காலத்திற்கு, காலம் வேறுபடும் சமூக வழக்கங்களின் மத்தியிலும் பறையர் என்றும், சக்கிலியர் என்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு தமது உரிமைகளை இழந்து வாழ்ந்திருந்தனர் என அவர் கூறுகின்றார். வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்திற்கு முன்பதாகவே பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பார்ப்பன சமூகத்தின் வேடத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

அக்கால மக்களின் நம்பிக்கைகள், கூத்துக்கள் ஊடாக கருத்துக்கள் பரப்பப்பட்ட விதங்கள் என ஐந்து தலைமுறைகளை கடந்த பயணித்து வரும் அனுபவம் நமக்கு கிடைத்து விடுகின்றது. தலைமுறை, தலைமுறையாக தொடரும் தீண்டாமை கலாசாரம், அதற்கு எதிரான மக்களின் போராட்டம் என்ற உருக்கமான கதை மாத்திரமல்ல. அதனையும் மீறி, அவற்றை வெற்றி கொள்ள வேண்டிய கேள்விகளையும் இந்த நாவல் எமக்கு உணர்த்துகின்றது.

இந்த நாவலின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரம், அரசியல், சமூக கட்டமைப்புக்கள் பற்றியும் ஆசிரியர் கூறத் தவறவில்லை. இவற்றுக்கும் மேலாக, மோகன்தாஸ் காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட அரிசன சேவா சங்க ஊழியர்கள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைப்பதற்கு ஆசிரியர் தயக்கங் காட்டவில்லை. அரிசனம் என்ற சொல் பயன்பாடு தொடர்பில் விவாதத்தை எழுப்பும் ஆசிரியர் ராமானுசம் என்ற பாத்திரத்தின் வாயிலாக “எப்படியும் பார்ப்பனீய சமூகம் பறைரையும், சக்கிலியரையும் தீண்டத் தகாதவர்களாக்கியது. அரிசனச் சொல்லால் அவர்களை அனாதைகளாகவும் ஆக்குகின்றார் காந்திஜீ” என்ற கருத்தை முன்வைக்கின்றார் ஆசிரியர்.

சுதந்திரத்திற்கு பின்னரும் கூட, இந்த மக்கள் வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படாத நிலையை சுட்டிக்காட்டி நக்சலைட்டுக்களின் சமூக பங்கு குறித்து குறிப்பிடுகின்றார். பொதுவாகவே எல்லா நாவல்களும் குறிப்பிட்ட பிரச்சினையில் ஆரம்பித்து அந்த பிரச்சினையின் முடிவில் நாவலின் கதாநாயகன் அல்லது கதாநாயகியினால் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு இன்பம் உண்டாவதாக நிறைவடையும். இங்கு அவ்வாறில்லை. எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத ஒரு பிரச்சினை. பறையர்களும், சக்கிலியர்களும் எவ்வாறு உருவானார்கள் என வேதங்கள் கூறும் காமதேனு கதையில் ஆரம்பித்து, பார்ப்பனீய சமூகத்தினால் உருவாக்கப்பட்ட புராணங்களும், வேதங்களும் எவ்வாறு தம்மை ஒதுக்கிவிட்டு தமது வசதிக்கு ஏற்றவாறு வரலாற்றை அமைத்துக் கொண்டன என்ற உண்மையையும் பல சந்தர்ப்பங்களில் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கின்றார் ஆசிரியர். நிறைவடையாத ஒரு பிரச்சினையை எமது முன்னால் நிறுத்துகின்றார். அதற்கான தீர்வுகளை தேடவேண்டிய கட்டாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கின்றார்.

பசி, பட்டினி, பஞ்சம், தொற்றுநோய்கள் ஏற்பட்ட காலங்களில் கிறித்துவ மதமாற்றம் அதன் மூலம், தீண்டாதவர்கள் இலக்கு வைக்கப்பட்டு உதவி செய்யப்பட்ட விதம், பின்னர் மேல்சாதியினரும் மதம் மாறி, அங்கும் தீண்டாதப்படாதவர்கள் என்ற விளிப்பெயரில் உழைக்கும் மக்கள் கூட்டம் ஒதுக்கப்பட்ட விதம் என்று தீண்டாத வசந்தம் நாவல் நகர்ந்து செல்கின்றது. நாவலைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆரம்பத்திலேயே நான் கூறியது போல், ஒவ்வொரு முறை வாசிக்கும் போது புதிது, புதிதாக நமக்குச் செய்திகளை தந்துக் கொண்டிருக்கும். மாவோயிஸ்டுக்கள், தெலுங்கானா போராட்டம் என இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் தற்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைப் போராட்டம் புதிய வடிவத்தினைப் பெற்றுள்ளது. மாவோயிஸ்டுக்கள், தெலுங்கானா போராட்டம் என்பன பற்றிய முழுமையான பின்னணிகள் பற்றி அறிய ஆவலாய் இருப்பதுடன், இவற்றிற்குப் பின்னணியில் இந்த தீண்டாமை என்பதும் அடிப்படையாக உள்ளமையை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நூலின் பின்னிணைப்பாக இருக்கும் நேர்காணலின் ஓரிடத்தில், “தீண்டாத வசந்தம் வாழ்க்கையின் குறிப்புக்கள் மட்டுமே. அந்தக் குறிப்புகள் இன்னும் இருக்கின்றன. மூன்று பாகங்கள் எழுத நினைத்தேன். இது இரண்டாம் பாகந்தான். முதல் பாகமும், மூன்றாம் பாகமும் எழுத வேண்டியுள்ளது. என் முன்னோர் விட்டுச் சென்ற எவ்வளவோ வாழ்வின் பின்னால் இருக்கின்றன. அதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டி இருக்கின்றது. இந்தப் பூமியில் வாழும் மனிதர் உள்ளங்களிலே நல்ல எதிர்காலம் குறித்த நம்பிக்யை வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதுதான் சிறந்த படைப்பின் பொறுப்பாகும். இன்றையத் தேவையும் அதுதான். இந்த மண்ணிலே பதிய சமுதாயத்தைக் கனவு காணும் போர் வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கனவுகள் அனைத்தும் ஒரு புரட்சித் தொகுப்பு. காதல், போராட்டம், தியாகம் அத்தொகுப்பு முழுதும் விரவியுள்ளன. அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இதிலே எனக்கு திட நம்பிக்கையுண்டு. என் எழுத்தும், வாழ்க்கையும் வருங்காலத் திட்டமும் அங்கேதான் இருக்கும். தீண்டாத வசந்தத்தில் ரூத்தின் நினைவு போராட்டத்திலே ஓய்வு கொள்கின்றது. என் எழுத்தும் அப்படியே எனது ஒய்வும் போராட்டத்தில் தான். மூச்சு நின்றாலும், எழுதுகோல் நின்றாலும் அங்கேயே! என் எதிர்காலத் திட்டம் என் கைகளில் இல்லை. மக்கள் கைகளில் தான் இக்கின்றது. அவர்களின் போராட்டப் பாதையிலேயே இருக்கின்றது.” எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும்
தீண்டாததே!

பிறந்த சாதி தீண்டாதது,
செய்ய
விரும்பிய போராட்டமும் தடை
செய்யப்பட்டது
.

அது
நேற்றாக இருக்கலாம்
இன்றாகவும்
இருக்கலாம்
எந்தக்
காலமாகவாவது இருக்கலாம்.

இந்த
வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும்
தீண்டாததே!

நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்களின் வரிசையில் “தீண்டாத வசந்தம்” நாவல் இருக்க வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த பதிவை வாசித்துவிட்டு (கொழும்பில் உள்ளவர்களுக்கு என்னிடம் உள்ள பிரதியை இரவலாக தர தயார். திருப்பி தந்துவிடுவீர்கள் என்ற உத்தரவாதம் அளித்தால்) ஒரு பத்து பேராவது இந்த நாவலை வாசிப்பர்களாயின், அவர்கள் ஊடாக அது நூறாகி, நூறு ஆயிரங்களாக மாறும்.

Comments

  1. நல்ல பகிர்வு தல...

    ReplyDelete
  2. தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. please tell me how to buy this book

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற