Skip to main content

அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய இருசக்கர வாகனம் (மோட்டார் சைக்கிள்) களவாடப்பட்டுவிட்டது. அல்லது என்னுடைய கவனயீனம் அந்த களவுக்கு துணைபுரிந்துவிட்டது. 6மாதங்கள் திட்டமிட்டு வாங்கிய அதனை 2 வாரங்களே பயன்படுத்தினேன். இதனை இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமிருக்கின்றது.

இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இருந்தாலும் நண்பர்கள், உறவினர்கள் என்று என்னில் அக்கறைகொண்ட பலர் தொலைபேசியூடாக அல்லது நேரடியாக தொடர்புகொண்டு தமது துயரத்தைபகிர்ந்துகொண்டனர். துயரம் தெரிவித்த பலர் சொன்ன விடயம்மச்சான் உனக்கு லக் இல்லடா என்பதாகும்.

இந்த அதிர்ஷ்டம் (லக்) என்றால் என்ன? இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் முட்டாள்களுக்கான நியாயப்படுத்தல்களின் கருவிகள் என்பது என்னுடைய எண்ணம். ஒரு மனிதனுடைய முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். அவனது முயற்சியின் அளவை பொறுத்தது அந்த பலனின் அளவும். இந்த அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் ஒரு மனிதனின் எண்ணங்களையும், நடத்தையையும் பொருத்தே அமைகின்றன என்கிறார் ஹேர்ட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன். ஒரு மனிதன் தன்னை அதிர்ஷ்டசாலியென்றோ, துரதிர்ஷ்டசாலியென்றோ அடையாளப்படுத்திக் கொண்டு அவனுடைய வாழ்க்கையின் வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும் அவனே காரணமாக அமைந்துவிடுகின்றான் என்பது அவரது முடிவாக இருக்கின்றது.

இது தொடர்பில் சிறந்த உளவியலாளரான அவர் செய்துள்ள ஆராய்ச்சி குறித்த அவரது அறிக்கையின் தமிழ்வடிவத்தை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

10 வருடங்களுக்கு முன்னர் அதிர்ஷ்டம் குறித்த ஆராய்ச்சி ஒன்றை செய்திருந்தேன். இந்த உலகில் சிலர் மாத்திரம் சரியான நேரத்தில், சரியான விடயங்களை செய்கிறார்கள். சிலருக்கு அதனை செய்ய முடிவதில்லை. இதனை இந்த உலகம் அதிர்ஷ்டம் என்றும் துரதிர்ஷ்டம் என்றும் வரையறுக்கின்றது. இது பற்றி அறிந்துகொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதன்பயன்தான் இந்த ஆராய்ச்சி. அதற்காக, தொடர்ச்சியாக அதிர்ஷ்டங்களையும் அல்லது தொடர்ச்சியாக துரதிர்ஷ்டங்களையும் அனுபவித்து வருபவர்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள் என நான் தேசிய பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தேன்.

எதிர்பார்க்க முடியாத அளவில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் இருபாலாரிடமிருந்தும் எனக்கு கிடைக்கப் பெற்றன. அவர்களுடன் நிறைய விடயங்களை கலந்துரையாடிய நான், அவர்களுடைய வாழ்க்கை முறைமை குறித்தும் கண்காணித்தேன். அவர்களை சில பரிசோதனைகளுக்கும் உட்படுத்தினேன். இந்த பரிசோதனைகளின் முடிவுகளில் இருந்து நான் அறிந்து கொண்ட விடயம் என்னவெனில், “இவர்களுடைய நடத்தைகளும், எண்ணங்களுமே இவர்களுடைய வாழ்க்கையின் நன்மையான செயல்களுக்கும், தீங்கான செயல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளன.” என்பதாகும்.

அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அதேவேளை துரதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் சந்தர்ப்பங்களை நழுவவிட்டார்கள்.

அவர்களது இயலுமையின் அளவிலா இந்த அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் தங்கியிருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள ஒரு சிறிய பரிசோதனையை நடத்தினேன். இரு சாராருக்கும் நான் ஒரு செய்திபத்திரிகையை கொடுத்தேன். அதனைநன்றாகப் பார்த்து அதில் இருக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கையை தெரிவிக்குமாறு கூறினேன். அந்த பத்திரிகையின் நடுப்பகுதியில் “இதனை பரீட்சையாளரிடம் காண்பிப்பவருக்கு 50 அமெரிக்கடொலர்கள் வழங்கப்படும்” என்ற ஒரு சிறிய குறிப்பொன்றை பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்தேன்.

இந்த குறிப்பு பத்திரிகையின் நடுப்பகுதியில் இரண்டு அங்குல அளவான எழுத்துக்களில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அனைவரும் எளிதாக வாசிக்கக் கூடியதாகவும் அந்த குறிப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்களால் அதனை அவதானிக்க முடியவில்லை. அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் அதனை அவதானித்திருந்தனர்.

அது மாத்திரமின்றி துரதிர்ஷ்டசாலிகள் எப்போதும் ஒரு பதட்டத்துடன் காணப்பட்டனர். இந்த பலவீனமே அவர்களது இயலுமையின் அளவை குறைத்து விடயங்களை தீர்மானிக்கக் கூடிய காரணியாக இருந்தது. இதன் விளைவாக அவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டனர். ஒரு குறிப்பிட்ட விடயத்தை மாத்திரமே நினைவில் வைத்துக் கொண்டு புதிய விடயங்களை கவனிக்கத் தவறிவிட்டனர்.
சுருங்கச் சொல்வதானால், அவர்கள் விழாக்களுக்கோ, நண்பர்கள் ஒன்று கூடும் விருந்துகளுக்கோ செல்லும் போது தனக்கான சிறந்த துணையை தேடுவதில் கவனஞ் செலுத்துவதால் நல்ல பல நண்பர்களை சந்திக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடுகின்றனர்.

அல்லது, வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தை தேடுபவர்கள்- குறித்த வேலைவாய்ப்பை மனதில் இருத்தி தேடும்போது அதனிலும் சிறந்த வேலைவாய்ப்புக்களை கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் பதட்டமின்றி, சுதந்திரமானவர்களாக இருந்தனர். அதனால் அவர்கள் புதிய விடயங்களை அவதானிப்பவர்களாகவும், சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் இருந்தனர். அதிர்ஷ்டசாலிகள் எனக் கூறிக்கொண்டவர்கள் நான்கு விடயங்களை பின்பற்றுவதன் மூலம் வெற்றிகளை அடைகின்றனர் என்பதனை என்னுடைய ஆராய்ச்சிகளிலிருந்து அறிந்து கொண்டேன்.
  • சந்தர்ப்பங்களை அவதானிப்பதிலும், உருவாக்கிக் கொள்வதிலும் அவர்கள் திறனுடையவர்களாக இருந்தார்கள்.
  • அவர்களை தங்களுடைய உள்ளுணர்வை செவிமடுத்து தீர்மானங்களை எடுப்பவர்களாக இருந்தார்கள்.
  • சாதகமான எதிர்பார்ப்புக்கள் ஊடாக சுயமாக எதிர்வுகூறல்களை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
  • கெட்ட விடயங்களை, நல்ல விடயங்களாக மாற்றிக் கொள்ளும் தகைமைகளை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
என்னுடைய ஆராய்ச்சி முடிவு எனக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. இந்த நான்கு எண்ணங்களும் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவுமா? என்பதே அந்த ஆச்சரியம். எனவே, நான் ஒரு குழுவை நியமித்து, அவர்களை இந்த எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்ட அதிர்ஷ்டசாலிகள் என்ற மனப்பாங்குடன் செயலாற்றுமாறு கூறினேன்.

ஆச்சரியத்தக்க பெறுபேறுகள்! இந்த பயிற்சிகள் அவர்களுக்கு சந்தர்ப்பங்களை அடையாளங் காணுவதற்கும், உள்ளுணர்வை செவிமடுப்பதற்கும், சாதாகமான எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்கும், பாதகமான விளைவுகளை தவிர்த்துக் கொள்வதற்கும் துணை புரிந்தன. ஒரு மாதத்தின் பின்னர் என்னிடம் வந்த அந்த குழுவினர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த குழுவில் 80வீதமானவர்கள், தாம் இப்போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்வதாகவும் கூறினார்கள். மிக முக்கியமாக கூறவேண்டுமென்றால், அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலியாக மாறியிருந்தார்கள்.

எனவே, உங்களுடைய எண்ணங்களும், நடத்தையுமே அதிர்ஷ்டத்திற்கும், துரதிர்ஷ்டத்திற்கும் உங்களை அழைத்துச் செல்கின்றது. அன்றில், அதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் உங்களை தொடர்வதாக நீங்கள் கற்பனை செய்துகொள்ளாதீர்கள்.

அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக மாறுவதற்கு பேராசிரியர். வைஸ்மென் கூறும் நான்கு விடயங்கள்.
  • உங்கள் உள்ளுணர்வுக்கு செவிமடுங்கள் - அது எப்போதும் சரியானதாகவே இருக்கும்.
  • உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மாற்றி புதிய விடயங்களுக்கு இடமளியுங்கள்.
  • இன்றைய நாளில் நடந்த நல்லவிடயங்களை நினைவுபடுத்துவதற்கு சில நிமிடங்களை செலவழியுங்கள்.
  • எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு முன்னர் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்ற எண்ணத்தை உங்களில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் பிரச்சினைகளின்றி வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் பிரச்சினைகளோடு வாழப் பழகிக் கொண்டவர்கள். அதனால் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.

Comments

  1. really a good article to share.
    nice picture.

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை.....
    நல்ல முயற்சி.........
    வாழ்த்துக்கள்...........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….