Skip to main content

405

மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் விறைக்க ஒரு உரைபொழுதும் கடவாது,

பனி
நிறைத்த பச்சைநிற
பசிபோக்கும் தாவரங்களின்
தலையொடித்து உயிர் வாழ,
405க்காய்
உழைப்பு சேர்க்கும்,
சிறகுகளற்ற
மலைக்குருவி நான்...
என் கூட்டுக்குள்ளே இரையிருக்கும்
ஒரு நாளின் இரு பொழுதில்,
சில நேரம் ஒரு பொழுதில்,
சில நேரம் வெறும் வயிறாய்,

ஆறிய கஞ்சிக்கும் வழியில்லை இங்கே,
ஏதோ தேயிலை தரும் சாயத்தை
உயிர் கடத்த உழுகின்றோம்…

உலகெல்லாம்
பல பேராய் பொழுதிறங்கி
பேச்சளக்க கொஞ்சம்,
களைப்பிறக்க
நாம் பறிந்த கொழுந்துகள்
உங்கள் கைகளில் தேயிலை தூள்களாக,
பல சுவையேற்றப்பட்டு,

இன்னும் நாங்கள்
சீனியற்ற வெறுஞ்சாயத்தை
சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

என்
அப்பன்,
அவன் அப்பன்,
அவனுக்கும் அப்பன்,
இன்னும்….

என் பிள்ளை,
அவன் பிள்ளை,
அவனுக்கும் பிள்ளை
இன்னும்…..

முடிந்ததும்,
தொடர்வதும்….

அந்த சில சதுர அடி அறையில்,
அடைபட்டு
நா அடக்கப்பட்டு…..
உழைத்து
நிமிர்ந்த, திரண்ட தோள்கள் இங்கே,
எட்டாய் வளைந்து....

ஊதியம் உயர்த்திக் கேட்கும்,
பின் 405இல்
ஏதோ ஒரு கை அடக்கும்…
ஊர்க்காரன் தொழிற்சங்கத்தில்
சந்தா செலுத்தும்….
களவாய் விற்கின்ற
கள் உண்டு களிக்கும்…
பின் மண்ணோடு மண்ணாகி போகும்.

இதுதான் தொடரும்….

கவ்வாத்து கத்தி
கதிரறுக்கும்,
கொழுந்து செடிகளிலே களையறுக்கும்,
மலை செதுக்கும்
என்றறிவார் உலகத்தார்…

உழைப்பு உறிஞ்சு
உயிர்
வாழும்
பணந்தின்னி அட்டைகளை
பிணமாக்கும் நாள் வருமோ!
அன்றில்
பயம் வருமோ!
மலையகத்தின்
மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் நிலைக்க நாள் வருமோ!

பொழுதெழுந்து
கொழுந்தெடுக்க போறேன்…
பொழுதெழுமா நம் வாழ்வில்…
405இல் நானும்….

(இலண்டனில் இருந்து வெளிவரவிருந்த தீபாவளி மலர் ஒன்றிற்காக கடந்த மாதம் எழுதிய கவிதை. பலநாட்கள் கழிந்த நிலையில், இன்று மீண்டும் வாசித்த போது பிடித்திருந்தது. )

Comments

  1. வாழ்த்துக்கள் .....

    மனதை தொட்ட வரிஇகள்...

    இன்னும் நாங்கள்
    சீனியற்ற வெறுஞ்சாயத்தை
    சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

    வாழ்க வளமுடன் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….