Skip to main content

சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம்...

கியூபாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் சேகுவேரா பிடெலுக்கு எழுதிய கடிதம் இது. தனது மரணத்திற்கு பின்னரே இந்த கடிதம் கியூப மக்கள் மத்தியில் வாசிக்கப்பட வேண்டும் என்பதே சேயின் விருப்பமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், சேயும், பிடெலும் பிரிந்துவிட்டார்கள் எனவும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகவும் பல்வேறுபட்ட வதந்திகளை அமெரிக்கா மற்றும் அதற்கு ஆதரவான ஏகாதிபத்திய நாடுகள் உலவவிட்டதன் காரணமாக, சே கொங்கோவில் இருந்த சந்தர்ப்பத்தில், கியூப மக்கள் மத்தியில் பிடெல் இந்த கடிதத்தை வாசித்தார்.


பிடெல்,

இந்த நேரத்தில் எனக்கு பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது. புறப்படத் தயாரான போது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது.பிறகு எல்லாம் புரிந்தது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள்.

இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். அந்த நிகழ்ச்சி திரும்புகிறது. கியூப புரட்சியில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகின்றேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புக்களிலிருந்தும், என்னுடைய அமைச்சர் பதவியிருந்தும், கமாண்டர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகின்றேன்.கியூபாவுடன் சட்டரீதியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை.ஆனால் இவைகளைப் போல விலக்கவே முடியாத வேறு உறவுகள் இருக்கின்றன. அவைகளை என்னால் உதறிவிட முடியாது.

புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைக்கின்ற அர்ப்பணிப்போடும் நான் கடந்த காலத்தில் பணிபுரிந்திருக்கின்றேன் என நம்புகின்றேன். என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியாரா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன். தலைமைக்கும், புரடம்சிகரத் தன்மைக்கும் தகுதியான உங்கள் குணநலன்களை உடனடியாக புரிந்துகொள்ளவில்லை.

அற்புதமான நாட்களில் நான் வாழ்ந்திருக்கின்றேன். கரீபிய சிக்கல் எழுந்த சோகமான ஆனால் வேகமான தருணங்களில் உங்களோடு சேர்ந்து மக்களின் பக்கம் நின்ற பெருமையை உணர்கிறேன். அந்த சந்தர்ப்பத்தில் உங்களைப் போல எந்தவொரு தலைவரும் அவ்வளவு பிரமாதமாக செயல்பட்டிருக்க முடியாது. அபாயங்களையும், கொள்கைகளையும் சரியாக எடுத்துரைத்த உங்களை சரியாக புரிந்து கொண்டு எந்த தயக்கமும் இன்றி பின்தொடர்ந்ததற்கு பெருமைப்படுகின்றேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது.

மகிழ்ச்சியோடும், வருத்தங்களோடும் தான் நான் இதனை செய்கின்றேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான உலகத்தைக் கட்டி எழுப்புவார்கள் என்கின்ற தூய்மையான எனது நம்பிக்கைகளை இங்கு விட்டுச் செல்கின்றேன்.தங்கள் மகனாக என்னை வரவேற்ற மக்களை நான் விட்டுச் செல்கிறேன். இதுதான் உயிரை வேதனைப்படுத்துகின்றது. புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையை கொண்டு செல்கின்றேன். மக்களின் புரட்சிக்கரத் தன்மைகளைப் பெற்று செல்கின்றேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகின்ற உணர்வை ஏந்திச் செல்கின்றேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது. ஆழமான காயங்களைச் சரிசெய்கின்றது.

கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்கியதைத் தவிர என் காரியங்களுக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. வேறொரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாகய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். நம்முடைய புரட்சியின் வெளியுறவுக் கொள்கையோடு அடையாளம் காணப்பட்டவன் நான். எங்கிருந்தாலும் அப்படியே இருப்பேன். கியூப புரட்சியாளனுக்குரிய பொறுப்பை உணர்ந்தே இருக்கின்றேன். அப்படியே நடந்து கொள்வேன்.என்னுடைய மனைவிக்கும், குழந்தைக்கும் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. மகிழ்ச்சிதான். வாழ்வதற்கு தேவையானவற்றையும் கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கின்றது.

உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்வதற்கு நிறையவே இருந்தாலும் அவை தேவையில்லை என நினைக்கின்றேன். வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.எனது முழுமையான புரட்சிகர உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத்தழுவிக் கொள்கின்றேன்.

சே.

Comments

  1. அருமையான பதிவு.. நன்றி

    ReplyDelete
  2. //கௌரி பிரியா//
    உங்கள் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)