Skip to main content

405

மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் விறைக்க ஒரு உரைபொழுதும் கடவாது,

பனி
நிறைத்த பச்சைநிற
பசிபோக்கும் தாவரங்களின்
தலையொடித்து உயிர் வாழ,
405க்காய்
உழைப்பு சேர்க்கும்,
சிறகுகளற்ற
மலைக்குருவி நான்...
என் கூட்டுக்குள்ளே இரையிருக்கும்
ஒரு நாளின் இரு பொழுதில்,
சில நேரம் ஒரு பொழுதில்,
சில நேரம் வெறும் வயிறாய்,

ஆறிய கஞ்சிக்கும் வழியில்லை இங்கே,
ஏதோ தேயிலை தரும் சாயத்தை
உயிர் கடத்த உழுகின்றோம்…

உலகெல்லாம்
பல பேராய் பொழுதிறங்கி
பேச்சளக்க கொஞ்சம்,
களைப்பிறக்க
நாம் பறிந்த கொழுந்துகள்
உங்கள் கைகளில் தேயிலை தூள்களாக,
பல சுவையேற்றப்பட்டு,

இன்னும் நாங்கள்
சீனியற்ற வெறுஞ்சாயத்தை
சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

என்
அப்பன்,
அவன் அப்பன்,
அவனுக்கும் அப்பன்,
இன்னும்….

என் பிள்ளை,
அவன் பிள்ளை,
அவனுக்கும் பிள்ளை
இன்னும்…..

முடிந்ததும்,
தொடர்வதும்….

அந்த சில சதுர அடி அறையில்,
அடைபட்டு
நா அடக்கப்பட்டு…..
உழைத்து
நிமிர்ந்த, திரண்ட தோள்கள் இங்கே,
எட்டாய் வளைந்து....

ஊதியம் உயர்த்திக் கேட்கும்,
பின் 405இல்
ஏதோ ஒரு கை அடக்கும்…
ஊர்க்காரன் தொழிற்சங்கத்தில்
சந்தா செலுத்தும்….
களவாய் விற்கின்ற
கள் உண்டு களிக்கும்…
பின் மண்ணோடு மண்ணாகி போகும்.

இதுதான் தொடரும்….

கவ்வாத்து கத்தி
கதிரறுக்கும்,
கொழுந்து செடிகளிலே களையறுக்கும்,
மலை செதுக்கும்
என்றறிவார் உலகத்தார்…

உழைப்பு உறிஞ்சு
உயிர்
வாழும்
பணந்தின்னி அட்டைகளை
பிணமாக்கும் நாள் வருமோ!
அன்றில்
பயம் வருமோ!
மலையகத்தின்
மலை தொடும் முகிலையும்,
வெயில் விரித்த நிழல் போர்வையின்
மனம் தொடும் அழகையும்
பார்த்து, ரசித்து
உயிர் நிலைக்க நாள் வருமோ!

பொழுதெழுந்து
கொழுந்தெடுக்க போறேன்…
பொழுதெழுமா நம் வாழ்வில்…
405இல் நானும்….

(இலண்டனில் இருந்து வெளிவரவிருந்த தீபாவளி மலர் ஒன்றிற்காக கடந்த மாதம் எழுதிய கவிதை. பலநாட்கள் கழிந்த நிலையில், இன்று மீண்டும் வாசித்த போது பிடித்திருந்தது. )

Comments

  1. வாழ்த்துக்கள் .....

    மனதை தொட்ட வரிஇகள்...

    இன்னும் நாங்கள்
    சீனியற்ற வெறுஞ்சாயத்தை
    சீவியமாய் வைத்திருப்பது கண்டவர் உண்டோ?

    வாழ்க வளமுடன் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….