Skip to main content

ஜனநாயகம் வளரட்டும்

பார் ஆளும் மன்ற உறுப்பினராய் தான் பிறக்க பாக்கியங்கள் பல செய்த பின் கண்டிருந்த சலுகைகள் எல்லாம் மறந்திடத்தான் ஆகிடுமோ!

எதிர்க்கட்சி, ஏனை எக்கட்சி என்றாலும் ஊர் கூடி வாக்கிட்டு வாழ்த்துச் சொல்லி மாலையிட்டு ஏற்றிவிட்ட புகழ் வாழ்க்கைதான் குறைந்திடுமோ!பார் ஆளும் மன்றம் தான் என்ன? பகைவன் வீடா? இல்லை பாம்பு வாழும் காடா? பல மக்கள் வாக்குப் போட்டு வழியனுப்பி வைத்த தீரர்கள் கூடும் திடல் அல்லவா!

எத்தனை தான் பேசினாலும், ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமெடுத்து கார் செல்ல
குளிர்காய்ந்திருந்த வேட்பாளர் எந்நாளும் அப்படியே திளைத்திருப்பாரோ!

ஒருநாள் தேர்தல் வரும், தீரர்கள் களம் புகுவர், கையெடுத்து கும்பிடுவார், கால் தொட்டு வணங்குவர், ‘ஐயா’, ‘அம்மணி’ மக்கள் தெய்வங்களாகுவர்!

அந்த ஒரு பொழுது போதாதா! பின் பல காலம் அடுத்த தேர்தல் வரும் வரை அவர்கள் தெய்வங்களாய், நீவீர் இல்லாத ஒன்றாய், காணாமல் போவீர்!

ஒன்றாகி, பலவாகி, பல்லுருவமாகி, அமைச்சாகி, அரசாகி, அகிலம் போற்றும் அநாதியாகி, பின் மீண்டும் தேர்தல் நாளில் மக்களாகி!

நம் தலைவன், நம் தலைவி- யார் மேல் பழியுரைப்போம்? சொன்னவன் யார், நாவை தறி! காட்டியவன் யார் கையை வெட்டு!

ஒரு
புள்ளடியில் அரசு சமைக்கும் அதிகாரம் நம்மிடம். யார் என்ன செய்வார்? அடி, உதை, கொல், புதை, யார் கேட்பார்? நாமல்லோ மன்னர்காள்!

நான்கு வருடம், மூடித் திறந்தால் முடிந்து விடும். வாக்குகள் மாறிவிழும், தோற்றவன் வெல்வான், வென்றவன் தோற்பன், நம் கையில் நாளை!நம்மிடம் செல்லாது நயவஞ்சகம், நான்கு வருடம் காத்திருந்து குப்புற விழச் செய்வோம். இன்றா வென்றாய், இனி நான்கு வருடம் மட்டுந்தான் உன்கையில்!

குறைந்த சம்பளமா, உண்ண உணவில்லையா? மகனைக் காணவில்லையா? மகள் எங்கே போனாள்? பொறுத்திரு நான்கு வருடம், காலம் வரும் மாற்றிவிடலாம்!

காலம் வரும், புரட்சி வரும் என்றெல்லாம் எழுதினாயா? எழுதியதை கிழித்துப் போடு, யாரிடமும் சொல்லாதே, அன்றேல் பின் கைது வரும்!

இதை பார்க்காதே! வாசிக்காதே! வாய் திறந்து பேசாதே! யாரிடமும் சொல்லாதே! ஜனநாயகம் வளரட்டும்!

Comments

  1. இன்றைய ஞாயிறு தினக்குரலில் இணையத்தில் எம்மவர்கள் - இந்த வார நட்சத்திரமாகத் தெரிவானதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….