Skip to main content

ஒரு ஆட்டு(சி)க் கதை......

ஒரு ஊரிலே, பல வெள்ளை ஆடுகளும், சில கறுப்பு ஆடுகளும், சில பழுப்பு நிற ஆடுகளும்,இந்த நிறங்கள் கலந்த ஆடுகளும் இருந்தன. நீண்ட காலமாக ஒன்றாகித் திரிந்த இந்த ஆடுகளுக்கு திடீரென ஒரு தலைவன் தேவைப்பட்டான். எல்லா ஆடுகளும் ஒன்று கூடி நடந்தும், கிடந்தும், படுத்தும், பாய்ந்தும், மேய்ந்தும் சிந்தித்தன. இறுதியில் எல்லாம் கூடி தேர்தல் ஒன்று நடத்துவதற்கு முடிவெடுத்தன.

ஏற்கனவே வெள்ளை ஆடுகளுக்கு தலைவனைப் போல் இருந்த ஆடு, போட்டியின்றி வெற்றி பெறலாம் என நினைத்திருந்தது. ஆனால், இன்னொரு வெள்ளைஆடு, இன்னும் சில வெள்ளை ஆடுகளுடன் சேர்ந்து வேறொரு வெள்ளை ஆட்டை தேர்தலில் போட்டியிட வைத்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த இன்னும் சில வெள்ளை ஆடுகளும் போட்டி போடுவதற்கு முன்வந்தன. தனித்த ஒரு கறுப்பாடும், சில பழுப்பு ஆடுகளும் கூட போட்டியிட முடிவு செய்து களமிறங்கின.

போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது. வீதிகளில் காகிதம் உண்ணும் ஆடுகளுக்கு, வீடு தேடி புல்லும், தரமான புண்ணாக்கும் கிடைக்கும் எனவும், ஆடுகளுக்கு சிறந்த பட்டிகள் கிடைக்கும் எனவும், புதிதாய் புல் நிறைந்த வெளிகள் உருவாக்கப்படும் எனவும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் பிரசாரங்கள் முடக்கி விடப்பட்டன. ஒட்டப்படும் பிரசார சுவரொட்டிகள் ஏனைய கட்சி ஆதரவு ஆடுகளால் மேயப்பட்டன. சில ஆடுகள் கைகலப்பிலும் ஈடுபட்டன. சில கறுப்பு ஆடுகள் ஒரு வெள்ளை ஆட்டையும், மற்றும் சில கறுப்பு ஆடுகள் வேறொரு வெள்ளை ஆட்டையும் ஆதரிப்பதாக அறிவித்தன. கறுப்பு ஆடுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

கறுப்பு ஆடுகளை ஆதரிப்பதாக கூறி பல ஒநாய்கள் உலகெங்கிலும் இருந்த பட்டிகளில் இருந்து வந்தன. வெள்ளை ஆடுகளுக்கு ஆதரவாய் சில ஒநாய்களும் வந்தன.

தேர்தல் நெருங்கி வந்தது. தேர்தல் நடைபெற்றது. பல ஆடுகள் வாக்களிக்கச் சென்றன. சில ஆடுகள் வாக்களிக்காது இருந்தன. வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன. கறுப்பு ஆடுகளுக்கும், பழுப்பு ஆடுகளுக்கும் பெரும் ஏமாற்றம். வெள்ளையாடொன்று தலைவன் ஆனது.

காலங்கள் போனது. மீண்டும் தேர்தல் வந்தது. மீண்டும் கடும் பிரசாரம். கடும் போட்டி. மீண்டும் கறுப்பு ஆடுகள் வெள்ளை ஆடுகளுடன் ஒப்பந்தம் போட்டன. தேர்தல் வந்தது. வெள்ளை ஆடொன்று வெற்றி பெற்றது. காலம் கடந்தது.

வெள்ளை ஆடுகளே, வெள்ளை ஆடுகளாக இருந்தன. கறுப்பு ஆடுகள் கறுப்பு ஆடுகளாக மட்டுமே இருந்தன. வெள்ளை ஆடுகளே தலைவனாக இருந்தன. கறுப்பு ஆடுகளும், பழுப்பு ஆடுகளும் தேர்தல் காலங்களில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும், முழக்கமிட்டும் கொண்டிருந்தன. இறுதியில் கறுப்பு ஆடுகளும், பழுப்பு ஆடுகளும் மேலும் பல வெள்ளை ஆடுகளும் உண்பதற்கு காகிதங்களும் இல்லை. புல்லும் இல்லை. பழுதாய்ப் போன புண்ணாக்குத் தானும் இல்லை. அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கின்றன.

பிரசார சுவரொட்டிகள் கொஞ்சமும், பிரசார வாக்குறுதிகள் கொஞ்சமும் உண்ணக் கிடைக்கும் என்ற ஆசையில். காலங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. வெள்ளை ஆடுகள் வெள்ளை ஆடுகளாக மட்டுமே இருக்கின்றன. கறுப்பு ஆடுகளும், பழுப்பு ஆடுகளும் மாறிமாறி வெள்ளை ஆடுகளை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் காலங்களில் மட்டுமே புல்லும், புண்ணாக்கும், குறைந்தபட்சம் காகிதமும் கிடைக்கின்றது. அதனால், காலம் முழுதும் தேர்தல் காலமாக இருக்கக் கூடாதா என அப்பாவி கறுப்பு ஆடுகளும், அப்பாவி பழுப்பு ஆடுகளும், ஏன் சில வெள்ளை ஆடுகளும் கூட எண்ணிக் கொண்டிருக்கின்றன.

எல்லாம் முடிந்த பிறகும் ஒநாய்கள் எதுவும் போகவில்லை. இன்னும் இருந்தன.பல ஒநாய்கள் வெறியோடு காத்திருந்தன. ஆடுகள் அடிபட்டு சாகும் வரை அமைதியாக.

இது முழுக்க முழுக்க ஒரு கதை எழுதும் முயற்சியே. எந்தவிதமான அரசியற் கலப்பும் அற்றது. அற்றது. அற்றது.

Comments

  1. நல்ல கதை, இது நல்ல கதை.

    ஆடுகளைப் பற்றியும் ஓநாய் போன்ற இதர விலங்குகளின் இயல்புகளையும் சிறப்பாக ஆராய்ந்து இந்த கதை படைக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் மாடு, எருமை, நாய், பூனை போன்ற விலங்குகளையும் கதாநாயகர்களாக்கி கதை படைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்...!

    ReplyDelete
  2. :)

    இது முழுக்க முழுக்க ஒரு கதை எழுதும் முயற்சியே. எந்தவிதமான அரசியற் கலப்பும் அற்றது. அற்றது. அற்றது.//

    நம்பிட்டம்.. நம்பத் தானே வேண்டும்..

    ReplyDelete
  3. நன்றி லோஷன் அண்ணா, நீங்க நம்பினத நாலு பேருக்கும் சொல்ல நம்பச் சொல்லுங்க...

    ReplyDelete
  4. நன்றி நிமல்... முயற்சி செய்வோம்...மிருகங்கள பத்தி எழுதினா யாரும் வழக்கு போடவும் மாட்டங்க....அதனால....ரிஸ்க் இல்ல....

    ReplyDelete
  5. உங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது என எனக்கு மட்டுமல்ல உங்களது நண்பர்களுக்கும் தெரியும்....சுவாரசியம்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற...

அம்புகளும், சில ஆண்டவர்களும்

எங்கிருந்தோ வந்து விழுந்த அம்பு மரமொன்றில் கீறி காயம் செய்தது அந்த அம்பு முன்பொரு நாளில் அதே மரத்தில் கிளையொடித்து தீட்டப்பட்டதாம் அதுவே, பின்பொரு நாளில் மரத்தில் கீறி காயம் செய்ததாம்! காடுகள் சுற்றி தேடுதல் செய்து, கதைகள் பல சொல்லி தீட்டப்பட்ட, தீட்டப்படாத அம்புகள் சில அடைத்து வைக்கப்பட்டன… காலங்கள் ஓடி ஒழிய இன்றைப் போல் ஒரு பொழுதில், அடைத்த அம்புகள் சிலவற்றின் கூர் முனைகள் ஒடிக்க மரம் வளர்க்கும் ஆண்டவர் விரும்பினராம்! ஒன்றைப் போல் வேறு மரத்தில் விளைந்த இந்த அம்புகள் முனை ஒடிக்கப்படும் செய்தி அறிந்து, அந்த மரத்தின் சக அம்புகளும், கிளைகளும், கொடிகளும், வேரைப் போன்ற விழுதுகளும் வீதியிறங்கி குரல் எழுப்புகின்றனவாம்! எதுவாயினும், நாளைப் போல் ஒரு நாளில் எதுவும் நடக்கலாம்! அம்புகள் கூராக்கப்படுவதும், விற்கள் வளைக்கப்பட்டு ஆண்டவரால் அனுப்பி வைக்கப்படுவதும் பின் மாறி, ஆண்டவர் தலைகளைப் பதம் பார்ப்பதும், எதுவும் நடக்கலாம் ….. (இது அரசியல் கவிதை அல்ல)

கந்தசாமி – அப்படியும், இப்படியும்…

க ந்தசாமி … சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் ரசிகர்களையே காத்திருக்க வைத்த திரைப்படம் . கடைசியாக வெளிவந்த விக்ரமின் “ பீமா ” திரைப்படம் பாரிய வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் , புதிய இயக்குநர்களின் வரவு , சூர்யா போன்றோரின் அர்ப்பணிப்புடனான நடிப்பு போன்ற பல போட்டிகளுக்கு மத்தியில் கந்தசாமி படம் வெளிவந்திருக்கின்றது . படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே பல பிரமாண்டங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் அதிகரித்திருந்தன . படபூஜைக்கான அழைப்பிதழ் , படப் பாடல் வெளியீட்டின் போது கிராமங்களை தத்து எடுத்தமை என ஆரம்பம் அதிரடியாக இருந்த நிலையில் , படவெளியீடும் 1000 பிரதிகளுடன் பிரமாண்டமாகவே இருந்தது . தர்க்கரீதியாக பல ஓட்டைகள் நிறைந்த 3 மணித்தியாலங்கள் நீளமான படத்தின் கரு மிகவும் பழைய கதை . சங்கரின் படங்களில் பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயம் . மிக அண்மையில் சிவாஜியில் கூட இந்த விடயம் தான் கூறப்பட்டிருந்தது . கருப்பு பணத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் முறை . சற்று மாறுப்பட்ட முறையை சுசிகணேசன் கந்தசாமிய...