Skip to main content

SEVEN POUNDS சுயம் மீட்கும் பயணம்...

நீண்ட நாட்களுக்கு முன்னர் என்னுடைய நண்பர் ஒருவர் செவன் பௌன்ட்ஸ் என்ற படம் ஒன்றைப் பற்றி கூறியிருந்தார். மிகவும் அருமையான படம் என்றும், நேரம் கிடைக்கும் போது பார்க்குமாறும் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறியமைக்கு மிக முக்கிய காரணம் நான் வில் ஸ்மித்தின் தீவிர ரசிகன். அவர் கூறிய பின்னர், சில நாட்களுக்கு அந்த படத்தை தேடி தேடி களைத்துவிட்டேன். இறுதியில் HBOவில் அந்த படம் போடுவதாக கடந்த வாரம் முதல் விளம்பரங்களைப் பார்த்தும் இன்று காலைதான் அதற்கான தருணம் கிடைத்தது. படத்தை பார்த்த பின்னர்தான், அடடா! இவ்வளவு நாட்களாக இந்த படத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்குள்.

SEVEN POUNDS- நடிகராக வில் ஸ்மித் தன்னை முழுமையாக நிரூபித்திருக்கும் ஒரு திரைப்படம். 2008 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த படத்தின் கதை சொல்லும் பாங்கு மிகவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயம். இந்த படத்தின் மூலக்கருவாக இருக்கக் கூடிய நாயகன் பென் தோமஸின் கடந்த கால வாழ்க்கை சிறிய, சிறிய காட்சிகளாக சொல்லப்பட்டு வருகின்றது. வில் ஸ்மித்தை ஒஸ்கர் விருதுகளில் சிறந்த கதாநாயகன் விருதுக்கு பரிந்துரை செய்ய வைத்த The Pursuit of Happyness என்ற திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குநரான Gabriele முச்சினோ எவ்வித தொய்வும் இன்றி அழகாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் தான் எடுத்துக் கொண்ட கதையை மக்களுக்கு வெளிக்கொணர்ந்துள்ளார். இவருடைய படங்களில் பொதுவாகவே காணப்படும் இரகசியம் ஒன்றை வைத்து பின்னப்பட்ட திரைக்கதை கலை, இந்த படத்தில் கையாளப்பட்டிருக்கின்றது. இத்தாலியரான இவரின் திரைப்பட பாணியில் பல ஹொலிவூட் விமர்சகர்கள் எதிர்ப்பு நிலையை பின்பற்றி வருகின்ற போதிலும், மக்களின் சாதாரண வாழ்க்கை முறையிலிருந்து கதை சொல்லும் பாங்கு ரசிர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
வாகனம் செலுத்தும் போது தனது கையடக்கத் தொலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை வாசித்தவாறே செல்லும் போது ஏற்படும் விபத்தே இந்த படத்தின் ஒன்றரை மணித்தியாலங்கள் கதாநாயகன் பயணிப்பதற்கான கதைக் கருவாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக் கட்டம், பெரும்பாலானவர்களின் கண்களை ஈரமாக்கியிருக்கும். சிலர் மனதை ஆட்டிப்போட்டிருக்கும். சிலர் மனதில் தாம் வாழ்க்கையின் தடங்கள் தொடர்பான கேள்விகளை உருவாக்கியிருக்கும்.தமது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து, அதன் விளைவான உயிர் இழப்புக்கள். நாயகனின் மனதில் ஆழமாய் வடுவாகிப் போகின்றது. இதிலிருந்து விடுபட்டு வெளிவருவதற்கு பென் எடுக்கும் முயற்சிகளும், உதவி செய்வதற்காக தெரிந்தெடுக்கும் ஏழு பேரின் வாழ்க்கையும், அவர்களின் துன்பங்களுமே கதையை நகர்த்திச் செல்கின்றது. கண் பார்வை இழந்த பியானோ கலைஞர், வைத்தியசாலையை கொண்டு நடத்துவதற்கு பணமின்றி இருக்கும் வைத்தியசாலை பணிப்பாளர், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெண், கணவனின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள பெண், மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவையாய் இருக்கும் ஒருவர், ஒரு சிறுவன் என ஏழு பேரை தெரிவு செய்து, அவர்கள் அந்த உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்களா என்பதை வரி சேகரிக்கும் அதிகாரியாக சென்று விசாரிக்கிறான் பென்.
இந்த பயணத்தில் தான் சந்திக்கும், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் எமிலி ரொசா (Rosario Dawson) என்ற பெண்ணிடம் தன்னையறியாமலேயே காதலில் விழுந்து விடுகின்றான் பென்.

எமிலி ரொசா, மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வில் ஸ்மித்துடன் தொலைபேசியில் உரையாடும் காட்சி. எமிலியின் வீட்டுக்குச் சென்று அவருக்குத் தெரியாமல் பழுதடைந்துள்ள அச்சு இயந்திரத்தை திருத்தும் காட்சி. படத்தின் இறுதிக் கட்டத்தில் எமிலியின் வீட்டில் இரவு விருந்துக்குச் சென்று இருவரும் உரையாடும் காட்சி. உதவி செய்வதற்கு ஏழு பேரையும் தேடிச் சென்று விசாரிக்கும் காட்சிகள் என்று வில் ஸ்மித்தால் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக நடிக்க முடியும் என்பதனை இயக்குநர் நிரூபித்துள்ளார்.
Men in black, Bad Boys, Hancock, I Robot என்று பல படங்களில் தனது அக்ஷன் மற்றும் நகைச்சுவையால் ரசிக்க செய்த வில் ஸ்மித்துக்கு இது ஒரு வித்தியாசமான படம்.

செவன் பௌன்ட்ஸ் ஆழமான, உணர்வுகளை தூண்டக்கூடிய சவாலான அனுபவமாக இருந்தது. நேரம் கிடைக்கும் போது பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.

Comments

  1. மிகவும் நல்ல விமர்சனம் நண்பா

    ReplyDelete
  2. http://geethappriyan.blogspot.com/2009/06/seven-pounds.html
    நானும் இதற்கு எழுதினேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

விண்ணைத் தாண்டி வருவாயா…… என்னில் வாழும் அதே காதல்....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னுமொரு நல்ல படம் பார்த்த அனுபவம் . கண்ணுக்கு குளிர்ச்சியான , என்னை , எனது வாழ்வின் கடந்த சில வருடங்களை மீண்டும் , மீட்டி பார்க்கும் அனுபவமாக இந்த படம் அமைந்தது என்பது வியப்புதான் . யதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கின்றது என்று தொடர்ச்சியாக இணையங்களிலும் , ஊடகங்களிலும் நேர்காணல்களில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் குறிப்பிட்டிருந்தார் . கடந்த சில காலங்களாக தமிழ் படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்த நான் , எனக்கு பிடித்த கதாநாயகர்களில் ஒருவர் , மிகவும் பிடித்த கதாநாயகி என்று பல காரணங்களால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்தேன் . வெளிநாட்டில் இருந்து வந்த அழைப்பில் நண்பன் ஒருவன் “ மச்சான் , இந்த படம் உன்ர கதைடா ” என்று சொன்ன பிறகும் ஒத்திவைக்காது பார்த்து விட வேண்டும் என்று நினைப்பில் கிடைத்த ஒய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டேன் . இந்தப் படம் முழுமையாக என் உணர்வுகள் சிலவற்றுக்கு உருவம் கொடுத்திருக்கின்ற