Skip to main content

பராக் ஒபாமாவும், கியூபாவும்.

தனது பதவியேற்பின் போதே குவாண்டனாமோ சிறைக்கூடம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையும், ஒபாமாவின் பதவியேற்பு தொடர்பில் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோவின் பாராட்டுக்களும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தது.


எனினும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதனால், ஆபிரிக்காவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திலும், கீழைத்தேய நாடுகளுடன் சிறந்த உறவையும் கடைப்பிடிப்பதிலும் பராக் ஒபாமாவின் பங்கு அதிகமாக இருக்கும் என பலர் எதிர்பர்த்திருந்தாலும், அவரது அமெரிக்க ஜனாதிபதி என்கின்ற முதலாளித்துவ, மேலாண்மை பதவி நிலை என்ற அடையாளம் அதற்கெல்லாம் சாதகமாக இருக்குமா என்பது சர்வதேச அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்தது. இருக்கின்றது.

அதனையெல்லாம் மாற்றும் விதமாக, அமெரிக்காவின் கால்பகுதியில் இருக்கும் இலத்தீன் அமெரிக்க நாடான கியூபாவுடன் 5 தசாப்தங்களாக நிலவி வந்த முரண்பாட்டை இல்லாது செய்யும் வகையில் கடந்த மாதம் பராக் ஒபாமா கைச்சாத்திட்ட செலவீன மசோதா பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் நிலவிவந்த தடைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக நேற்றைய தினம் வெள்ளை மாளிகை பேச்சாளர் அறிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் மூலம் கியூபாவில் வசிக்கும் தனது உறவினர்களை காலவரையறையின்றி சென்று சந்திப்பதற்கு அமெரிக்க வாழ் கியூபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கியூபாவில் வசிப்பவர்களுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் கியூபாவைச் சேர்ந்தவர்கள் பணம் அனுப்புவதும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் புஷ் நிர்வாகத்தில் வருடத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரமே அமெரிக்காவில் வசிக்கும் கியூபர்களுக்கு, கியூபா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் பராக் ஒபாமாவினால் கைச்சாத்திடப்பட்ட செலவீன மசோதாவின் ஊடாகவே இந்த பொருளாதார தடைநீக்கம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ரொபர்ட் கிப்ஸ் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கரீபியன் தீவுகளில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க வல்லரசு இதே தொனியில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதாக கூறிக்கொண்டு ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஏற்படுத்திய பேரழிவுகள் எதனையும் யாரும் மறந்திருக்க முடியாது.

1959 ஆம் ஆண்டு புரட்சிகரப் போராளி சேகுவேராவுடன் இணைந்து பிடெல் காஸ்ட்ரோ கியூபாவை பாடிஸ்டா(அமெரிக்காவின் உளவுத்துறையின் கையாளாக செயற்பட்டு வந்தவன்) என்ற கொடுங்கோலனிடம் இருந்து விடுவித்து ஜனநாயக நீரோட்டத்தில் அந்நாட்டை இணைத்தார். அன்றே கியூபா மீது சகல வழிகளிலும் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கென்னடிக்கு பின்னர் பேச்சில் வசீகரத்தன்மை கொண்டவராகவும், சிறந்த பேச்சாளராகவும் வர்ணிக்கப்படும் பராக் ஒபாமா, கியூபாவுடனான எவ்வாறான உறவுகளை பேணப் போகின்றார் என்பதை அவரது நடவடிக்கைகளில் இருந்தே அறிந்து கொள்ள முடியும் என பிடெல் காஸ்ட்ரோ தனது பாராட்டுக்களின் போது தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே அமெரிக்கா இந்த பொருளாதார தடை நீக்கத்தை அறிவித்திருக்கின்றது. இந்த தடை நீக்கத்தின் ஊடாக அமெரிக்காவின் நிறுவனங்கள் கியூபாவில் செயற்படுவதற்கான வழிகள் ஏற்படும். ஆக மீண்டும் ஒரு ஆதிக்க சக்தியாக அல்லது காலனியாக்கல் சிந்தனையோடு அமெரிக்கா கியூபாவில் காலடி வைப்பதற்கு எண்ணுமாயிருந்தால், மீண்டும் ஒரு பாரிய தோல்வியையே அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும். பிடெல் காஸ்ட்ரோ என்ற புரட்சியாளன் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விலகினாலும், கியூப புரட்சியில் பிடெல் காஸ்ட்ரோவின் முக்கிய தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட ராவுல் காஸ்ட்ரோவே தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ளார். அத்துடன், வெனிசுவேலா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிரான வெளிப்படையான கொள்கைகளை அறிவித்து வரும் நிலையிலேயே பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கின்றார்.

கியூபாவுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பராக் ஒபாமா, ஜனநாயக ரீதியான தேர்தல்கள் கியூபாவில் நடத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே கியூபா மீதான முழுமையான பொருளாதார தடைகளும் நீக்கப்படும் என அறிவித்துள்ளார்.இதேவேளை, எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் கரீபியன் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாட் டொபேக்கோவுக்கான பராக் ஒபாமாவின் விஜயத்தின் போது கியூபாவுடனான உறவுகள் தொடர்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் எனத் தெரிய வருகின்றது. எவ்வாறாயினும், பராக் ஒபாமா ஏனைய அமெரிக்க ஜனாதிபதிகளைப் போன்றே முதலாளித்துவ மேலாண்மை போக்குடன் செயற்படப் போகின்றாரா? அல்லது மக்களின் உண்மையான நலன்களை கருத்திற் கொண்டு செயற்படப் போகின்றாரா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி

பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன். பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இனமுரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும் (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது அனைவருக்கும் வணக்கங்கள்! இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். 30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்

பாலைவெளியில் பதியும் சுவடுகள்

நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள் இல்லாத வெளியில் நெரிசல் இன்றி பயணிக்கும் நாம் மட்டுமே உலகு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் அதில், தொலைவுகள் பிரிக்காத, விசாக்கள் விலக்காத அருகாமை தரும், காலங்கள் நிறுத்தாத, இரவுகள் துரத்தாத உறவு நீளும், மெய்நிகர் வாழ்வின் மிதமான சுகம் நிறையும், உன் அனுமதியின்றி உன்னை காதல் செய்யும் கருவி அது, சூரியச் சுற்றுகையின் விடியல்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் காதலால் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்….